டெல்லி: விவசாயிகளின் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது


டெல்லி:  விவசாயிகளின் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது
x
தினத்தந்தி 14 Dec 2020 1:10 PM GMT (Updated: 14 Dec 2020 1:10 PM GMT)

டெல்லி நோக்கிய பேரணியின் ஒரு பகுதியாக இன்று நடந்த விவசாயிகளின் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது.

புதுடெல்லி,

விவசாயிகள் நலன்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெறவேண்டும் என்று வலியுறுத்தியும் அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளில் ஒரு பிரிவினர் டெல்லி நோக்கி பேரணியாக செல்ல முடிவு செய்தனர்.

கடந்த நவம்பர் 26ந்தேதி முதல் தொடர்ந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தினால் தலைநகர் டெல்லி முடங்கியுள்ளது.  விவசாயிகளுடன், அரசு பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக தீர்வு காணப்படவில்லை.  இந்நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என மத்திய வேளாண் மந்திரி தோமர் கூறியுள்ளார்.

விவசாயிகளின் போராட்டம் இன்று 19வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது.  இதனை முன்னிட்டு டெல்லி, அரியானா மாநில எல்லையில் தொடர்ந்து பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.  அவர்கள் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.  ஆளில்லா விமானமும் போராட்ட சூழலை கண்காணித்து வருகிறது.

விவசாயிகளின் போராட்டத்தினால் சிங்கு, திக்ரி, ஆச்சண்டி, ஜரோடா, பியாவோ மணியாரி மற்றும் நகரின் வெளிப்புற மற்றும் தென்மேற்கு பகுதியில் அமைந்த முங்கேஷ்பூர் மற்றும் கிழக்கு டெல்லியில் உள்ள டெல்லி மற்றும் நொய்டா ஆகிய இரு நகரங்களை இணைக்கும் சில்லா எல்லை என 7 எல்லைகள் முழுவதும் மூடப்பட்டு உள்ளன.

இதுதவிர டெல்லி நோக்கி செல்லும் வாகனங்களுக்கான டெல்லி-மீரட் விரைவு சாலையும் மூடப்பட்டு உள்ளது.  இதனால், அந்த பகுதி வழியே டெல்லி நோக்கி செல்லும் வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது.  தலைநகர் டெல்லிக்கு செல்வோர், சொந்த மாநிலம் திரும்புவோர் என பல்வேறு தரப்பு மக்களும் விவசாயிகளின் போராட்டத்தினால் பாதிக்கப்பட்டனர்.

இதனால், டெல்லி-நொய்டா எல்லையை திறந்து விட டெல்லி போலீசார் முடிவு செய்து அதற்கான பணிகள் நேற்றிரவு நடைபெற்றன.  போராட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகள் குழுவினர் மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்க இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்நிலையில், சிங்கு எல்லையில் விவசாயிகளின் இந்த உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதன்பின்னர், விவசாயிகள் சங்க அமைப்பொன்றின் மாநில தலைவர் மன்ஜீத் சிங் கூறும்பொழுது, மத்திய அரசின் கொள்கைகளால் அன்னம் வழங்கும் நாங்கள் இன்று உண்ணாவிரதம் கடைப்பிடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.  மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என கூறியுள்ளார்.

Next Story