யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படாது - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்


யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படாது - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 22 Jan 2021 9:52 AM GMT (Updated: 22 Jan 2021 9:52 AM GMT)

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக யூபிஎஸ்சி தேர்வு எழுத முடியாமல் போன கடைசி வாய்ப்பு உள்ளவர்களுக்கு கூடுதலாக எந்த வாய்ப்பும் வழங்கப்படாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கடந்த ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி யூபிஎஸ்சி தேர்வு நடந்தது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக பலர் தேர்வு எழுதி வரவில்லை. பலர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் இருந்தனர். கரோனா நோயாளிகளாகவும், கரோனா நோயிலிருந்து சிகிச்சை முடித்த நிலையில் இருந்ததாலும், போக்குவரத்து வசதி போதுமானதாக இல்லை என்பதால், தேர்வு எழுத முடியவில்லை.

இதையடுத்து, யூபிஎஸ்சி தேர்வு எழுத முடியாமல்போன கடைசி வாய்ப்பை இழந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கிட வேண்டும எனக் கோரி தேர்வு எழுத தவறவிட்ட மாணவர்கள் பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையில் நீதிபதிகள் பி.ஆர். காவே, கிருஷ்ணா முரேரா அமர்வில் இன்று காணொலி மூலம் விசாரிக்கப்பட்டது. அப்போது மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை சார்பில் மத்திய சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ ஆஜரானார்.

அவர் தாக்கல் செய்த பதில் மனுவில், 'யூபிஎஸ்சி தேர்வு எழுதுவதைத் தவறவிட்ட கடைசி வாய்ப்பு உள்ளவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவதற்கு அரசு தயாராக இல்லை. இதற்குரிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் தேவை. மத்திய அரசிடம் இருந்து நேற்று இரவுதான் இதற்கான உத்தரவு எங்களுக்குக் கிடைத்தது' எனத் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story