சீரம் நிறுவனத்தில் தீ; நாசவேலை காரணமா? முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதில்


சீரம் நிறுவனத்தில் தீ; நாசவேலை காரணமா? முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதில்
x
தினத்தந்தி 23 Jan 2021 1:21 AM GMT (Updated: 23 Jan 2021 1:21 AM GMT)

கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் பலியானர்கள். இது நாசவேலை காரணமா? என்பதற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதிலளித்தார்.

மும்பை, 

இந்தியாவில் கொரோனா தடுப்புக்காக பயன்படுத்தப்பட்டு வரும் கோவிஷீல்டு மருந்தை மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வினியோகம் செய்து வருகிறது. 

இந்தநிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் சீரம் நிறுவன வளாகத்தில் உள்ள ஒரு 5 மாடி கட்டிடத்தில் பயங்கரமாக தீ பற்றி எரிந்தது. தீயணைப்பு படையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் கட்டிடத்தில் சிக்கிய 9 பேர் மீட்கப்பட்டனர். இதேவேளையில் 5-வது மாடியில் தீயில் சிக்கி உயிரிழந்த 5 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.

தீப்பிடித்த கட்டிடத்தின் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வந்ததாகவும், உயிரிழந்தவர்கள் அந்த பணியில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் என்பதும் தெரியவந்தது. பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று சீரம் நிறுவன தலைவர் ஆதர் பூனவாலா தெரிவித்தார். உலக அளவில் பல்வேறு தடுப்பு மருந்துகளை தயாரித்து வழங்கி வரும் சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த துயர சம்பவத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.


தீ விபத்து குறித்து புனே நகர ஹடப்சர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தீ விபத்து தொடர்பாக அரசு உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி புனே மாநகராட்சி, புனே பெருநகர மண்டல வளர்ச்சி கழகம், மராட்டிய தொழில் வளர்ச்சி கழகம் ஆகிய 3 அமைப்புகள் விசாரணையில் பங்கேற்று உள்ளன. அந்த அமைப்புகள் நேற்று தங்களது விசாரணையை தொடங்கின.

இதுகுறித்து புனே பெருநகர மண்டல வளர்ச்சி கழக தீயணைப்பு துறை தலைவர் தேவேந்திர பாட்போதே கூறுகையில், நாங்கள் நேரில் சென்று விசாரணை நடத்தினோம். தீ விபத்து ஏற்பட்டது எப்படி?, தீ பரவியது எப்படி? என்பது குறித்து ஆய்வு செய்தோம். புனே மாநகராட்சியின் திட்ட மற்றும் வளர்ச்சி ஆணையம், மராட்டிய தொழில் வளர்ச்சி கழகம் ஆகியவை தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து ஒரு முடிவுக்கு வரும். அதன் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்படும், என்றார்.தடயவியல் நிபுணர் குழுவினரும் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.

இதற்கிடையே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று தீ விபத்து நடந்த கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சீரம் நிறுவன தலைவர் ஆதர் பூனவாலா உடன் இருந்தார்.

பின்னர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது, இது நாசவேலை காரணமா? என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, "விசாரணை முடியட்டும். அதன்பிறகு தான் எதையும் சொல்வது சரியாக இருக்கும். அப்போது தான் இது விபத்தா? அல்லது நாசவேலையா? என்பது நமக்கு தெரியும்" என்றார்.


Next Story