11-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி: விவசாயிகள் தான் இனிமேல் முடி வெடுக்க வேண்டும் - மத்திய அரசு


11-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி: விவசாயிகள் தான் இனிமேல் முடி வெடுக்க வேண்டும் - மத்திய அரசு
x
தினத்தந்தி 23 Jan 2021 2:31 AM GMT (Updated: 23 Jan 2021 2:31 AM GMT)

விவசாயிகள் தான் இனிமேல் முடி வெடுக்க வேண்டும் நீங்களே முன்வந்து பேச்சுவார்த்தைக்கு வாருங்கள். உங்களை வரவேற்கத் மத்திய அரசு தயாராக இருக்கிறது என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் இதுவரை 140க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். 10 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும் வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே  எந்த முடிவும் எட்டப்படவில்லை.

10-வது சுற்று பேச்சுவார்த்தையில் வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், சுமுக தீர்வு காண ஒரு கூட்டுக்குழுவை அமைப்பதாகவும் ஒரு திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது.

18 மாதங்களுக்கு வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்ட போதும் அவற்றை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

நேற்று நடந்த  11-வது சுற்றுபேச்சுவார்த்தையிலும் மத்திய அரசு முன்வைத்த 18 மாதங்கள் வேளாண் சட்டங்களை நிறுத்திவைக்கிறோம் என்ற  திட்டத்தையும் விவசாயிகள் புறக்கணித்தனர். வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். இதனால் 11 வது சுற்று பேச்சுவார்த்தையும்  தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, வீடியோ வெளியிட்டு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகள் தான் இனிமேல்முடி வெடுக்க வேண்டும் என  தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து  மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் அதில் அவர் கூறியிருப்பதாவது:

கனத்த இயத்தோடு நான் சொல்வது என்னவென்றால், இந்த கூட்டத்துக்கு தேவையான மையப்புள்ளி, கண்ணோட்டம் இடம்பெறாமல் பேச்சு நடந்தது. 20 நிமிடங்கள் மட்டுமே இன்றைய கூட்டம் நடந்தது. அதனால் தான் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை.

விவசாயிகள் கையில்தான் இனிமேல், அனைத்தும் இருக்கிறது. இந்த விவகாரத்தின் தன்மை புரிந்து தான், விவசாயிகளின் நலனுக்காக வேளாண் சட்டங்களை 18 மாதங்கள் நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இந்த சட்டங்களை நாங்கள் நிறுத்திவைக்கிறோம் என்பதால், இந்த சட்டங்கள் குறையுள்ளது எனத் தவறாகக் கருதக்கூடாது.

விவசாயிகள் சமூகத்தின் நலனை போராடும் விவசாயிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஜனநாயகத்தில் மனம் ஒத்துப்போதல் மற்றும் வேற்றுமைகள் இயல்பானது. ஆனால், பேச்சுவார்த்தை மூலம் ஏதாவது ஒர் தீர்வு எட்டப்பட வேண்டும்.

ஆனால், துரதிருஷ்டம் என்னவென்றால், இதுவரை 11 சுற்றுப்பேச்சு நடந்தும் எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை. போராட்டத்தை இதுவரை அமைதியாக நடத்திய விவசாயிகள் சங்கங்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவிக்கிறோம்.

பொதுவாக பேச்சுவார்த்தை நடக்கும்போது புதிதாக எந்தப் போராட்டத்தையும் அறிவிக்கமாட்டார்கள். ஆனால், விவசாயிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் அதேநேரத்தில் புதிய போராட்டத்தையும் அறிவிக்கிறார்கள், அதை வெற்றிகரமாக நடத்துகிறார்கள். ஆனால், இதுபற்றி நாங்கள் ஒருபோதும் பேசியதில்லை.

வேளாண் சட்டங்களை நிறுத்திவைக்கிறோம் எனச் சிறந்த திட்டத்தை மத்திய அரசு முன்மொழிந்தது. உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என வலியுறுத்துகிறேன். நீங்கள் ஏதேனும் முடிவெடுத்தால், அல்லது முடிவுக்கு வந்தால், நீங்களே முன்வந்து பேச்சுவார்த்தைக்கு வாருங்கள். உங்களை வரவேற்கத் மத்திய அரசு தயாராக இருக்கிறது
இவ்வாறு தோமர் தெரிவித்துள்ளார்.

Next Story