லாலு பிரசாத்துக்கு கொரோனா இல்லை; நலமுடன் உள்ளார்: ரிம்ஸ் மருத்துவமனை அறிக்கை


லாலு பிரசாத்துக்கு கொரோனா இல்லை; நலமுடன் உள்ளார்:  ரிம்ஸ் மருத்துவமனை அறிக்கை
x
தினத்தந்தி 23 Jan 2021 12:55 PM GMT (Updated: 23 Jan 2021 12:55 PM GMT)

பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் ரிம்ஸ் மருத்துவமனையில் இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்ல பரிந்துரைக்கப்பட்டு உள்ளார்.

ராஞ்சி,

பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  அவரது உடல்நிலை மோசமடைந்த சூழலில், ராஞ்சி நகரில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

இதன்பின்னர் மாநில மருத்துவ வாரியம் அளித்த பரிந்துரையின் பேரில் அவரை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், லாலுவின் உடல்நிலை பற்றி ரிம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், லாலு பிரசாத்தின் உடல்நலம் அதே நிலையில் நீடித்து வருகிறது.  அவர் உடல்நிலை சீராக உள்ளது.  அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என முடிவு வெளிவந்து உள்ளது.

இதேபோன்று அவருக்கு நடந்த ரத்த பரிசோதனையின் முடிவில் சாதாரண தொற்று ஏற்பட்டு உள்ளது என அறிக்கை வெளிவந்துள்ளது.  நெஞ்சு பகுதியில் நடந்த எச்.ஆர்.சி.டி. ஸ்கேன் பரிசோதனையில் நிம்மோனியா உள்ளது என தெரிய வந்துள்ளது.  அவரை மாநில மருத்துவ வாரிய ஆலோசனையின்பேரில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைக்கப்பட்டு உள்ளார் என்று தெரிவித்து உள்ளது.

Next Story