மத்திய அரசு நிதியை முறைகேடு செய்தேன் என்பதா? அமித்ஷா மீது அவதூறு வழக்கு தொடருவேன்; புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி


மத்திய அரசு நிதியை முறைகேடு செய்தேன் என்பதா? அமித்ஷா மீது அவதூறு வழக்கு தொடருவேன்; புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 2 March 2021 10:59 AM GMT (Updated: 2 March 2021 10:59 AM GMT)

மத்திய அரசு நிதியை முறைகேடு செய்தேன் எனக்கூறிய அமித்ஷா மீது அவதூறு வழக்கு தொடருவேன் என்று புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

ஜனநாயக படுகொலை
புதுச்சேரியில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு கவிழ்ந்த நிலையில் அங்கு முதல்-அமைச்சராக இருந்த நாராயணசாமி சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். அங்கு, நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் பா.ஜனதா கூட்டு சேர்ந்து காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பண மூட்டைகளை கொட்டி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சித்தனர். அந்த முயற்சியை தொடர்ந்து முறியடித்து வந்தோம்.தற்போது தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை மிரட்டி பல கோடி ரூபாய் செலவு செய்து எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தனர். இது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை.

சவால்
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியில் எந்த வளர்ச்சி திட்டங்களும் இல்லை என்று நரேந்திரமோடியும், அமித்ஷாவும் கூறி இருக்கிறார்கள். இது, முழுக்க முழுக்க பொய்யானது. மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு 41 சதவீத நிதி ஒதுக்கிய போதும் புதுச்சேரிக்கு 20 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்கியது. இருந்தபோதிலும் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தினோம்.புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ததாகவும், இதில் கொஞ்சம் தொகையை நான் எடுத்துக்கொண்டு மீதியை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் காந்தி குடும்பத்துக்கு கொடுத்ததாகவும் அமித்ஷா ஒரு குற்றச்சாட்டை கூறி உள்ளார்.

இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க தயாரா? எனஅமித்ஷாவுக்கு சவால் விடுகிறேன். இந்த குற்றச்சாட்டு குறித்து எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன். உள்துறை வசம் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, உளவுத்துறை என அத்தனை துறைகளும் உள்ள போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இந்த நிதியை அனுப்பியது யார், எந்த திட்டத்துக்கு அனுப்பப்பட்டது, எப்போது அனுப்பப்பட்டது என்பதை உள்துறையால் கண்டுபிடிக்க முடியாதா?. புதுச்சேரிக்கு வழங்க வேண்டிய நிதியையே மத்திய அரசு வழங்கவில்லை.

அவதூறு வழக்கு
ராகுல்காந்தி, நரேந்திரமோடிக்கு சவாலாக இருப்பதால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி திட்டமிட்டு தாக்குகிறார்கள். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வேண்டுமென்றே கூறிய அமித்ஷா மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடருவேன். இதற்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளேன். என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் எந்த தண்டனைக்கும் தயாராக இருக்கிறேன். இல்லையென்றால் நாட்டு மக்கள் மத்தியில் அமித்ஷா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கலைக்க கிரண்பெடி ஒத்துழைக்கவில்லை என்பதற்காக அவர் நீக்கப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் ஆதாரமற்றவை. புதுச்சேரி அரசுக்கு மெஜாரிட்டி இருப்பதால் 
விதிமுறைப்படி செயல்படுவேன் என்று கிரண்பெடி சொன்னதாக தகவல். அதுபற்றி முழுமையாக தெரியாது. புதுச்சேரியில் கூட்டணி குறித்து மூத்த தலைவர்கள் பேசி வருகிறார்கள். புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சி அமையும்.

மொழி பெயர்ப்பு சர்ச்சை
எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ராகுல்காந்தியின் பேச்சை தவறாக மொழி பெயர்த்ததாக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர் வீடியோ வெளியிட்டனர். உண்மையிலேயே, ராகுல்காந்தியிடம் அந்த பெண் எழுப்பிய கேள்வி எனக்கு கேட்கவில்லை. நிவர் புயல் என்பது மட்டுமே கேட்டது. இதனால் தான் நிவர் புயலின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளை நான் அமைச்சர்களுடன் சென்று பார்வையிட்டதாக தெரிவித்தேன். ஆனால், கேள்வி எழுப்பிய பெண் நிவர் புயலுக்கு நான் வந்ததை ஒத்துக்கொண்டு, தானே புயல் என்பதற்கு பதிலாக நிவர் புயல் என கூறி விட்டதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story