ராகுல்காந்தி குறித்த கருத்துக்கு மன்னிப்பு கோரிய முன்னாள் எம்.பி.


ராகுல்காந்தி குறித்த கருத்துக்கு மன்னிப்பு கோரிய முன்னாள் எம்.பி.
x
தினத்தந்தி 31 March 2021 2:33 PM IST (Updated: 31 March 2021 2:33 PM IST)
t-max-icont-min-icon

ராகுல்காந்தி குறித்த சர்ச்சை கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி. மன்னிப்பு கோரினார்.

திருவனந்தபுரம்

கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் கடும் போட்டி நடந்து வருகிறது.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி குறித்து இடுக்கி முன்னாள் எம்.பி.யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த நிர்வாகியுமான ஜாய்ஸ் ஜார்ஜ் பேசிய பேச்சு சர்ச்சையாகி உள்ளது.

கடந்த வாரம் ராகுல் காந்தி, கொச்சியில் உள்ள ஒரு கல்லூரிக்கே சென்று மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அந்தச் சம்பவத்தை  ஜார்ஜ் விமர்சித்துள்ளார்.கொச்சியில் உள்ள புகழ்பெற்ற தெரஸா மகளிர் கல்லூரிக்குக் கடந்த வாரம் ராகுல் காந்தி சென்றிருந்தார். அங்குள்ள மாணவிகள் கோரிக்கையை ஏற்று தான் பயின்ற அகிடோ கலையைக் கற்றுக்கொடுத்தார். இதைக் குறிப்பிட்டு ஜார்ஜ் பேசியுள்ளார்.

இடுக்கி மாவட்டம் இரட்டையார் பகுதியில் மின்துறை அமைச்சர் மாணிக்கு ஆதரவாக ஜாய்ஸ் ஜார்ஜ்  தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

ராகுல் காந்தி ஏன் எப்போதும் பெண்கள் படிக்கும் கல்லூரிக்குச் சென்று பேசுகிறார். பெண்களுக்கு தற்காப்பு கலையை கற்றுக்கொடுக்கிறேன் என்று கூறி நேராக நில்லுங்கள், குனிந்து, வளைந்து நில்லுங்கள் என்று பெண்கள் அருகே ராகுல் செல்கிறார். பெண்கள் அருகே ராகுல் காந்தி செல்லக்கூடாது. இதுபோன்றும் செய்யக்கூடாது. ராகுல் காந்தியுடன் பேசும்போது பெண்கள் சற்று முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். ராகுல் காந்தி திருமணமாகாதவர், சிக்கலை உருவாக்கக்கூடியவர் என கூறினார்.

ஜாய்ஸ் ஜார்ஜின் பேச்சுக்குக் கேரளா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கடும் கண்டனம் தெரிவித்து, ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மாநிலத்தின் பல இடங்களில் ஜாய்ஸ் ஜார்ஜின் உருவ பொம்மைகளை காங்கிரஸ் கட்சியினர் எரித்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி.ஜாய்ஸ் ஜார்ஸ் நேற்று வெளிப்படையாக மன்னிப்பு கோரினார். ராகுல் காந்தி குறித்துத் தான் பேசிய வார்த்தைகளையும் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து ஜாய்ஸ் ஜார்ஜ் நிருபர்களிடம் கூறுகையில், "இரட்டையார் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குறித்து நான் பேசிய கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன். நான் பேசிய வார்த்தைகளையும் திரும்பப் பெறுகிறேன்" எனத் தெரிவித்தார்.

ஜாய்ஸ் ஜார்ஜ் பேசிய கருத்து குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்தக் கருத்தும் கூற மறுத்துவிட்டது. இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டபோது, "நாங்கள் அரசியல் ரீதியாகத்தான் எதிர்ப்பு தெரிவிப்போம். தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதில்லை" எனகூறினார்.

Next Story