இந்தியாவில் முதல் முறையாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது


இந்தியாவில் முதல் முறையாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது
x
தினத்தந்தி 5 April 2021 4:07 AM GMT (Updated: 5 April 2021 4:07 AM GMT)

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் இன்று கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் அலை தொடர்ந்து நமது நாட்டைத் தாக்கி வருகிறது. தினந்தோறும் இந்த கொடிய தொற்றுநோயின் தாக்குதலுக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது அதிர வைப்பதாக அமைந்துள்ளது. 

அந்த வகையில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் நாடு முழுவதும் புதிதாக 1 லட்சத்து 03 ஆயிரத்து 249 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  நாட்டில் ஏற்பட்ட ஒருநாள் அதிகபட்ச கொரோனா பாதிப்பு இதுதான் ஆகும்.  கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 478- பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கை 1 கோடியே 25 லட்சத்து 89 ஆயிரத்து 067 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 16 லட்சத்து 82 ஆயிரத்து 136 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 7 லட்சத்து 41 ஆயிரத்து 830- பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

கொரோனாவுக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்து 101- ஆக உள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 7 கோடியே 91 லட்சத்து 05 ஆயிரத்து 163- ஆக உயர்ந்துள்ளது. 


Next Story