சத்தீஸ்கார் என்கவுண்டர்: கடத்தப்பட்ட பாதுகாப்பு படை வீரரின் புகைப்படத்தை வெளியிட்ட நக்சலைட்டுகள்


சத்தீஸ்கார் என்கவுண்டர்: கடத்தப்பட்ட பாதுகாப்பு படை வீரரின் புகைப்படத்தை வெளியிட்ட நக்சலைட்டுகள்
x
தினத்தந்தி 7 April 2021 10:33 AM GMT (Updated: 7 April 2021 10:33 AM GMT)

சத்தீஸ்கார் என்கவுண்டரின்போது பாதுகாப்பு படை வீரர் ஒருவரை நக்சலைட்டுகள் பிணைக்கைதியாக கடத்தி சென்றுள்ளனர்.

ராய்ப்பூர்,

சத்தீஸ்கார் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த 3-ந் தேதி பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகளுக்கு எதிராக மாபெரும் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, வனப்பகுதிக்குள் மறைந்திருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால், இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. பல மணி நேரங்கள் நீடித்த துப்பாக்கிச்சண்டையில் நக்சலைட்டுகள் தாக்குதலில் பாதுகாப்பு படையினர்  22 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். நக்சலைட்டுகள் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த என்கவுண்டர் தாக்குதலின் போது பாதுகாப்புபடையின் ‘கோப்ரா’ கமாண்டோ படை பிரிவை சேர்ந்த வீரர் ஒருவர் மாயமானார். அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

இதற்கிடையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நக்சலைட்டுகள் தரப்பில் அறிக்கை வெளியிட்டப்பட்டது. அதில் பிஜாப்பூர் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 24 பேர் உயிரிழந்ததாகவும் 31 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், தங்கள் தரப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக நக்சலைட்டுகள் தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கையில் மாயமான பாதுகாப்பு படைவீரர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக நக்சலைட்டுகள் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கடத்தப்பட்ட பாதுகாப்பு படைவீரரின் புகைப்படத்தை நக்சலைட்டுகள் இன்று வெளியிட்டுள்ளது. கடந்தப்பட்ட பாதுகாப்பு படைவீரர் ’கோப்ரா’ கமாண்டோ படை பிரிவை சேர்ந்த ராகேஷ்வர் சிங் மன்ஹஸ் என்பது தெரியவந்துள்ளது. கடத்தப்பட்ட பாதுகாப்பு படைவீரர் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவரை துன்புறுத்தமாட்டோம் என்றும் நக்சலைட்டுகள் தெரிவித்துள்ளனர். 

மேலும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு படைவீரர் ராகேஷ்வர் சிங் மன்ஹஸை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு மத்தியஸ்தரை நியமிக்க வேண்டும் எனவும் நக்சலைட்டுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story