பற்றாக்குறை: மராட்டியத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிக நிறுத்தம்


பற்றாக்குறை:  மராட்டியத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிக நிறுத்தம்
x
தினத்தந்தி 8 April 2021 3:25 AM GMT (Updated: 8 April 2021 3:25 AM GMT)

மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை என கூறி தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

புனே,

நாட்டிலேயே மராட்டியத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து உச்சமடைந்து வருகின்றன.  கடந்த 24 மணிநேரத்தில் 59,907 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டும், 322 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,15,736 பேருக்கு நேற்று பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன.  இது ஒரு நாளில் மிக அதிக அளவாகும்.  இந்த உயர்வால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 28 லட்சத்து ஆயிரத்து 785 ஆக உள்ளது.

நாட்டில் ஒரே நாளில் 630 பேர் உயிரிழந்து உள்ளனர்.  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,66,177 ஆக உயர்வடைந்து உள்ளது.  இந்நிலையில், மராட்டியத்தின் பன்வெல் மாநகராட்சி கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளன.

இதுபற்றி மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், பன்வெலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி போடும் பணிகளானது, தடுப்பூசி பற்றாக்குறையால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.  தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்ட பின்னர் மையங்கள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும், மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் கூறும்பொழுது, இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை எங்கும் ஏற்படவில்லை.  தடுப்பூசி பற்றாக்குறை குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை.  மராட்டிய அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியுள்ளது என கூறியுள்ளார்.

சில மாநில அரசுகள் தங்கள் தோல்வியை மறைப்பதற்காக, மக்களிடம் கொரோனா பீதியை ஏற்படுத்தி வருகின்றன என்றும் அவர் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

Next Story