தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் உள்ளூர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தல் - புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது


தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் உள்ளூர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தல் - புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது
x
தினத்தந்தி 30 April 2021 5:22 AM IST (Updated: 30 April 2021 5:22 AM IST)
t-max-icont-min-icon

அதிக எண்ணிக்கையிலான தொற்று கொண்டிருக்கும் மாவட்டங்களில் உள்ளூர் அளவில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

புதுடெல்லி, 

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு அவ்வப்போது அறிவித்து வருகிறது.

அந்தவகையில் மே மாதத்துக்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தொற்று சாத்திய விகிதம் 10 சதவீதத்துக்கு மேல் உள்ள மாவட்டங்கள் அல்லது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 60 சதவீத படுக்கைகள் நிரம்பிய மாவட்டங்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடையாளம் காண வேண்டும்.

இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை கொண்டிருக்கும் மாவட்டங்களில் தொற்றை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மற்றும் உள்ளூர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நிலைமை மதிப்பீட்டின் அடிப்படையில் உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்காக கடந்த 25-ந் தேதி மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கிய ஆலோசனையில் குறிப்பிட்டுள்ளபடி, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பரிசீலிக்குமாறும் மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கொரோனா நிர்வாகத்திற்கான தேசிய வழிமுறைகள் நாடு முழுவதும் தொடர்ந்து பின்பற்றப்படும்.

இவ்வாறு உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

சமூக கட்டுப்பாடு மற்றும் மிகப்பெரிய கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கான செயல்பாட்டு கட்டமைப்பு தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களையும் உள்துறை அமைச்சகம் தனது செய்திக்குறிப்பில் இணைத்திருந்தது.

மத்திய அரசின் இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மே 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

உள்ளூர் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறு மத்திய அரசு கூறியிருந்தாலும், எந்த பகுதியிலும் ஊரடங்கு அமல்படுத்துமாறு பரிந்துரைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story