உலகின் எந்த சுகாதார அமைப்பும் இதுபோன்ற சுமையை சமாளிக்காது - எய்ம்ஸ் தலைவர் கருத்து


உலகின் எந்த சுகாதார அமைப்பும் இதுபோன்ற சுமையை சமாளிக்காது - எய்ம்ஸ் தலைவர் கருத்து
x
தினத்தந்தி 1 May 2021 10:20 PM GMT (Updated: 1 May 2021 10:20 PM GMT)

உலகின் எந்த சுகாதார அமைப்பும் இதுபோன்ற சுமையை சமாளிக்காது என்று டெல்லி எய்ம்ஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை புரட்டி எடுத்து வருகிறது. நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. 

பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை வசதி, மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலையும் நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி கொரோனாவின் கோர 2-வது அலைக்கு மிகப்பெரிய இலக்காகி உள்ளது.

கொரோனா பரவலை தடுக்க மருத்துவ துறையினரும், மத்திய மாநில அரசுகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையில் கொரோனா கட்டுப்பாட்டை மீறி பரவி வருகிறது. இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

இந்நிலையில், உலகின் எந்த சுகாதார அமைப்பும் இதுபோன்ற சுமையை சமாளிக்காது என்று டெல்லி எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று கூறியதாவது,

இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு மற்றும் சுகாதார ஊழியர்கள் அதன் எல்லையை விட்டு தாண்டியே சென்றுவிட்டது. தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா பரவலால் இது ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாம் மிகவும் கடுமையாக வேலை செய்யவேண்டும். இது போன்ற சுமையை உலகின் எந்த நாட்டு சுகாதார அமைப்பாலும் சமாளிக்க முடியாது. 

தொற்று உள்ள பகுதிகள் கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக்கப்படுதல், முழு ஊரடங்கு போன்றவை கொரோனாவின் இரண்டாவது அலை தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ள உள்ள வழிகள் ஆகும்’ என்றார்.   

Next Story