மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 3-வது முறையாக ஆட்சியை பிடித்தது


மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 3-வது முறையாக ஆட்சியை பிடித்தது
x
தினத்தந்தி 2 May 2021 6:48 PM GMT (Updated: 2 May 2021 6:48 PM GMT)

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

கவனத்தை ஈர்த்த களம்

மினி நாடாளுமன்ற தேர்தலைப் போன்ற பரபரப்புடன் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த களமாக மேற்கு வங்காள தேர்தல் களம் இருந்தது.மொத்தமுள்ள 294 இடங்களில் 292 தொகுதிகளுக்கு மார்ச் 27-ந்தேதி முதல் கடந்த 29-ந்தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடந்தது. 2 தொகுதிகளில் வேட்பாளர் மரணத்தால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், மத்தியில் ஆளும் பா.ஜனதா மற்றும் இடதுசாரிகள்-காங்கிரஸ் கூட்டணி என மும்முனைப்போட்டி அமைந்தது.தலைவர்களின் வார்த்தை மோதல்கள், தேர்தல் கமிஷனின் தடை நடவடிக்கைகள், வாக்குப்பதிவின்போது நடந்த மோதல்-மரணங்கள் என மிகவும் கொதிநிலையில் அரங்கேறிய மேற்கு வங்காள தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி

மாநிலத்தில் மும்முனை போட்டி இருந்தபோதும் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையேதான் போட்டி நிலவியது.தொடக்கத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே நெருக்கமான போட்டி காணப்பட்டது. இதனால் மாநிலத்தில் ஆட்சியமைப்பது யார்? என்பதில் பலத்த சந்தேகம் நிலவி வந்தது.ஆனால் நேரம் செல்லச் செல்ல மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசின் கை ஓங்கத்தொடங்கியது. முடிவில் மொத்தம் 216 தொகுதிகளை பிடித்து திரிணாமுல் காங்கிரஸ் அபார சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் மாநிலத்தில் 3-வது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது. கட்சியின் ஹாட்ரிக் வெற்றி மூலம் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்கிறார்.

பா.ஜனதாவுக்கு 74 இடங்கள்

அங்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த பா.ஜனதா 74 இடங்களை பிடித்துள்ளது. சுயேச்சை மற்றும் ஆர்.எஸ்.எம். என்ற கட்சி தலா ஓரிடங்களை பெற்றன.அதேநேரம் மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புவரை தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்த இடதுசாரிகளும், அவர்களுடன் இணைந்து களமிறங்கிய காங்கிரசும் வெற்றி கணக்கை தொடங்காமலேயே போய்விட்டன.

மம்தா பானர்ஜி உரை

சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து, தனது வீட்டில் வாழ்த்து தெரிவிக்க குழுமிய தொண்டர்கள் மத்தியில் மம்தா பானர்ஜி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘இது வங்காளத்தின் வெற்றி. அனைவரும் கொரோனா நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தற்போதைக்கு வெற்றி பேரணி எதுவும் இல்லை. அது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்’ என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய அரசின் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும் எனக் கூறினார்.

தலைவர்கள் வாழ்த்து

மேற்கு வங்காளத்தில் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ள மம்தா பானர்ஜிக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

அந்தவகையில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்பட பலர் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து உள்ளனர்.

 


Next Story