‘சொன்னதை செய்து விட்டேன்’ தேர்தல் வியூக நிபுணர் பணியில் இருந்து விலகுகிறேன்; பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு


‘சொன்னதை செய்து விட்டேன்’ தேர்தல் வியூக நிபுணர் பணியில் இருந்து விலகுகிறேன்; பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு
x
தினத்தந்தி 2 May 2021 10:05 PM GMT (Updated: 2 May 2021 10:05 PM GMT)

சொன்னதை செய்து விட்டேனே். அரசியல் ஆலோசகர் பணியில் இருந்து விலகுகிறேன் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

தேர்தல் வியூகம்

மேற்கு வங்காளத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவியது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகங்களை பிரசாந்த் கிஷோர் தலைமையிலான நிறுவனம் வகுத்து கொடுத்தது.

இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் முன்பு டுவிட்டரில் பதிவொன்றை வெளியிட்டு இருந்தார். அதில் “குறிப்பிட்ட சில ஆதரவு ஊடகங்களின் அனைத்து விதமான பிரசாரங்களால் பா.ஜ.க. வலுவாக காண்பிக்கப்படுகிறது. உண்மையில், மேற்கு வங்காளத்தில் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை வெல்லவே தடுமாற போகிறது. ஒருவேளை சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. சிறப்பான வெற்றியை பெற்று விட்டால், நான் டுவிட்டரிலிருந்து விலகி விடுகிறேன்” என தெரிவித்தார்.

விலகல்

இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

மேற்கு வங்காள தேர்தலில் பா.ஜ.க.வே வெற்றி பெறும் என்ற எண்ணம் கட்டமைக்கப்பட்டது. ஆனால், நான் தொடக்கத்தில் இருந்தே கூறி வந்தேன். பிரதமர் மோடியின் பிரபலத்தை வைத்து கொண்டே எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற முடியாது. இதனை உணர்ந்து கொள்ள வேண்டும். நான் கூறியபடியே பா.ஜ.க. இரட்டை இலக்கத்தை தாண்டவில்லை.

இருந்தாலும் நான் அரசியல் வியூக பணியில் இருந்து விலக போகிறேன். 9 ஆண்டுகள் இந்த பணியை செய்து விட்டேன். போதும், இனிமேல் நான் எனது குடும்பத்தினருடன் காலத்தை செலவிடுகிறேன். எனது ஐபேக் நிறுவனத்தை அதில் உள்ள மற்ற நண்பர்கள் நடத்துவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story