டெல்லிக்கு தினமும் 976 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை - துணை முதல்மந்திரி மனிஷ் சிசோடியா


டெல்லிக்கு தினமும் 976 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை - துணை முதல்மந்திரி மனிஷ் சிசோடியா
x
தினத்தந்தி 3 May 2021 10:11 AM GMT (Updated: 3 May 2021 10:11 AM GMT)

டெல்லிக்கு தினமும் 976 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுவதாக துணை முதல்மந்திரி மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதற்கிடையில், டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆக்சிஜன் பற்றக்குறையை போக்க மத்திய அரசும், கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், தலைநகர் டெல்லி தேவையை விட குறைவாகவே ஆக்சிஜன் பெறுவதாக துணை முதல்மந்திரி மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சிசோடியா கூறுகையில்,

18-45 வயதிற்கு உள்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் 301 மையங்களில் தொடங்கியுள்ளது. கொரோனா தடுப்பூசிகளை அதிகம் பெறும் பட்சத்தில் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளோம். 

மே 1-ம் தேதி 4.5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுள்ளோம். தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளோம். இன்று 45,150 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவு செய்துள்ளனர். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வமுடன் உள்ளனர். பதிவு செய்துள்ளவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள் என நம்பிக்கை உள்ளது.

ஆக்சிஜனை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல எங்களுக்கு அவசர உதவி தேவைப்படுகிறது. இதற்காக, மத்திய அரசு, தனியார் அமைப்புகள், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிடம் உதவி கேட்டுள்ளோம்.

டெல்லி நேற்று 440 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பெற்றது. ஆனால், அது ஒதுக்கப்பட்ட 590 மெட்ரிக் டன் ஆக்சிஜனை விட குறைவு. கொரோனா படுக்கைகள் அதிகரித்து வருவதால் எங்களுக்கு தினமும் 976 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தினமும் தேவைப்படுகிறது’

என்றார்.

Next Story