மேற்கு வங்காளத்தில் வன்முறை: ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு


மேற்கு வங்காளத்தில் வன்முறை: ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
x
தினத்தந்தி 4 May 2021 10:20 PM GMT (Updated: 4 May 2021 10:20 PM GMT)

மேற்கு வங்காள வன்முறை விவகாரத்தில் அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கோரியும், சி.பி.ஐ. விசாரணை கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

புதுடெல்லி, 

மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைக்கிறது.

இதற்கிடையே, மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் கட்சியினர், எதிர்க்கட்சியினர் மீது வன்முறையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. அந்த வன்முறை சம்பவங்களை அடுத்து, மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக் கோரி சென்னையைச் சேர்ந்த இன்டிக் கலெக்டிவ் டிரஸ்ட் அமைப்பு சார்பில் வக்கீல் எம்.எஸ்.சுவிதத், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், மேற்கு வங்காளத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட மத்திய பாதுகாப்பு படைகளை அனுப்ப மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். வன்முறை சம்பவங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட வேண்டும்.

தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் ஈடுபட்டோரை உடனடியாக கைது செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இதே விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. தலைவரும், வக்கீலுமான கவுரவ் பாட்டியாவும் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் நடத்தப்படுவதாக கூறப்படும் வன்முறை, கொலைகள் குறித்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும். வன்முறை தொடர்பாக இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் உள்ளிட்டவை அடங்கிய நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய மேற்கு வங்காள அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த இரு மனுக்களும் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story