இந்தியாவில் 3 நாட்களுக்குப் பிறகு சற்று உயர்ந்த கொரோனா பாதிப்பு


இந்தியாவில் 3 நாட்களுக்குப் பிறகு  சற்று உயர்ந்த கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 5 May 2021 4:33 AM GMT (Updated: 5 May 2021 4:33 AM GMT)

இந்தியாவில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 87 ஆயிரத்து 229- ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை, கட்டுக்கடங்காமல் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. கடந்த 1-ந் தேதி பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டி பதிவானது உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் 2-ந் தேதியில் இருந்து தொடர்ந்து பரவல் குறைந்து வருகிறது.

2-ந் தேதி 3 லட்சத்து 92 ஆயிரத்து 488 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. 3-ந் தேதி இது 3 லட்சத்து 68 ஆயிரத்து 147 ஆக பதிவானது. நேற்று (4-ந் தேதி) இது, 3 லட்சத்து 57 ஆயிரத்து 229 ஆக பதிவானது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருந்தது. ஆனால், இன்று  கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி,  கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 82 ஆயிரத்து 315- பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து  3 லட்சத்து 38 ஆயிரத்து 439- பேர் ஒரே நாளில் குணம் அடைந்துள்ளனர். எனினும் கவலை அளிக்கும் விஷயமாக தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3,780- பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 06 லட்சத்து 65 ஆயிரத்து 148- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 1 கோடியே 69 லட்சத்து 51 ஆயிரத்து 731- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் 2 லட்சத்து 26 ஆயிரத்து 188- பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 34 லட்சத்து 87 ஆயிரத்து 229- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Next Story