தமிழகம் உள்பட 17 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.9,871 கோடி நிதி

தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு ரூ.9 ஆயிரத்து 871 கோடி ரூபாய் மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது.
புதுடெல்லி,
நடப்பு 2021-22-ம் நிதியாண்டில் மாநிலங்களுக்கு பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை நிதியில் 3-வது தவணையாக ரூ.9 ஆயிரத்து 871 கோடி வழங்கப்படுகிறது. தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு இத்தொகையை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது.
இத்தொகையுடன், இந்த நிதியாண்டில் முதல் 3 மாதங்களில் மொத்தமாக ரூ.29 ஆயிரத்து 613 கோடி, மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வருவாய் பகிர்வுக்குப் பின் மாநிலங்களின் வருவாய் கணக்கில் ஏற்படும் இடைவெளியை நிரப்ப அரசியல் சாசனத்தின் 275-வது பிரிவின்படி மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என நிதிக் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த நிதியை தமிழகம், ஆந்திரா, அசாம் உள்ளிட்ட 17 மாநிலங்களுக்கு வழங்கவும் 15-வது நிதிக் குழு பரிந்துரை செய்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் 17 மாநிலங்களுக்கு மொத்தமாக ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 452 கோடியை பகிர்ந்து அளிக்க நிதிக் குழு பரிந்துரைத்துள்ளது. அது 12 மாத தவணைகளில் விடுவிக்கப்படும்.
Related Tags :
Next Story