பா.ஜ.க. வெற்றிக்கு பிரதமர் மோடியின் தலைமைத்துவமே காரணம்: சிவசேனா எம்.பி.


பா.ஜ.க. வெற்றிக்கு பிரதமர் மோடியின் தலைமைத்துவமே காரணம்:  சிவசேனா எம்.பி.
x
தினத்தந்தி 10 Jun 2021 10:06 PM GMT (Updated: 10 Jun 2021 10:06 PM GMT)

பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தினாலேயே பா.ஜ.க. வெற்றி பெறுகிறது என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் முதல் மந்திரியாக உள்ள உத்தவ் தாக்கரே, டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன் அவரை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்புக்கு பின், மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் பற்றி மத்திய அரசு முக்கிய முடிவுகளை எடுக்கும் என உத்தவ் தாக்கரே கூறினார்.

இந்நிலையில், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, பிரதமர் மோடி நாட்டின் மற்றும் பா.ஜ.க.வின் தலை சிறந்த தலைவர் என நான் நம்புகிறேன்.  கடந்த 7 ஆண்டுகளில் அக்கட்சி பெற்ற வெற்றியானது பிரதமர் மோடியால் மட்டுமே என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

முன்னாள் பா.ஜ.க. தலைவர் வாஜ்பாய் பதவி காலத்தில் கூட, மராட்டியத்தில் தேர்தல் நடந்தபொழுது, பாலாசாஹேப் தாக்கரேவின் புகைப்படங்கள் தேர்தல் பிரசாரத்திற்கு போஸ்டர்களில் பயன்படுத்தப்பட்டன என கூறியுள்ளார்.

மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியுடன் சிவசேனா ஆட்சி செய்து வருகிறது.  இந்நிலையில், முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிவிட்டு வந்த பின்னர் சஞ்சய் ராவத் அளித்துள்ள பேட்டியில் பிரதமரை புகழும் வகையில் பேசியுள்ளார்.


Next Story