புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் 21-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு


புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் 21-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
x
தினத்தந்தி 14 Jun 2021 11:55 PM GMT (Updated: 14 Jun 2021 11:55 PM GMT)

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் 21-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம். சுற்றுலா தலங்களுக்கு தொடர்ந்து அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை கோரத் தாண்டவமாடி வருகிறது.

தொற்று பரவல்
புதுவை மாநிலத்திலும் தொற்று பாதிப்பு அதிகரித்ததால் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் தொற்று பரவல் கட்டுக்கடங்காததால் கடந்த மே மாதம் முதல் அடுத்தடுத்து முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வந்தது.ஆனால் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது. அரசின் கடுமையான நடவடிக்கை களால் புதுவையில் 2 ஆயிரமாக இருந்த தினசரி தொற்று பாதிப்பு 500-க்கு கீழ் சரிந்தது. உயிரிழப்பும் குறைந்தது.

தளர்வுகள்
இதையடுத்து பல்வேறு தளர்வுகளுடன் கடந்த 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை ஒருவார காலத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதில் அனைத்து விதமான கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டது. வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன.பெரிய மார்க்கெட்டில் அனைத்து கடைகளும் வழக்கம்போல் செயல்பட்டது. மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்த ஊரடங்கு நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது.

ஒரு வாரம் நீட்டிப்பு
இதைத்தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ஊரடங்கை மேலும் ஒருவாரம் நீடிப்பதுடன் சில தளர்வுகள் அளிக்க முடிவு செய்யப்பட்டது. 
இதையடுத்து கூடுதல் தளர்வுகளுடன் வருகிற 21-ந் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.அதன்படி புதுச்சேரியில் காய்கறி மற்றும் பழ கடைகள் அதிகாலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதி 
அளிக்கப்படுகிறது. அதேபோல் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து இருக்கலாம்.அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 சதவீத ஊழியர்களுடன் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வழக்கம்போல் பணிகளை மேற்கொள்ளலாம்.

மது பார்களுக்கு அனுமதி
மதுபான கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம். ஓட்டல்கள், மது பார்களுடன் கூடிய ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் 50 சதவீதம் வாடிக்கையாளர்களுடன் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி 

அளிக்கப்பட்டுள்ளது.சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பொதுப்போக்குவரத்து (பஸ், கார், ஆட்டோ) மாலை 5 மணி வரை இயங்கலாம். கடற்கரை சாலையில் நடை பயிற்சி செல்ல காலை 5 
மணி முதல் 9 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட வலியுறுத்தல்
ஓட்டல்கள், மது பார்கள், தங்கும் விடுதிகளில் பணிபுரியும் ஊழியர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், கட்டுமான பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளித்து புதுச்சேரி அரசு செயலர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Next Story