வருங்கால வைப்புநிதி கணக்கில் ஆதாரை இணைக்க செப்டம்பர் 1-ந் தேதி வரை கால நீட்டிப்பு

வருங்கால வைப்புநிதி கணக்கில் ஆதாரை இணைக்க செப்டம்பர் 1-ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
கொரோனா நோய் பரவல் காரணமாக நிதி சிக்கல்களில் தவிக்கும் ஒரு நபர் தனது வருங்கால வைப்புநிதி (பி.எப்.) கணக்கில் இருந்து ஒரு தொகையை திரும்ப பெற்று கொள்ளலாம் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இந்த அறிவிப்பின் படி பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க பி.எப். கணக்கில் இருக்கும் தொகையின் ஒரு பகுதியை ஊழியர்கள் திரும்ப பெறலாம்.
இந்த நிலையில் சமூக பாதுகாப்பு குறியீடு 2020 சட்டத்தின் 142-வது பிரிவில் சமீபத்தில் ஒரு புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விதியின்படி ஊழியர்களின் பி.எப். கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு மேற்கொள்ளப்படாவிட்டால் ஊழியர்கள் வேலை பார்த்து வரும் நிறுவனத்தின் சார்பில் பற்று வைக்கப்படும் தொகை இந்த மாதம் (ஜூன்) முதல் பி.எப். கணக்கில் வந்து சேராது. ஊழியர்களின் கணக்கில் நிறுவனம் சார்பில் அவர்களது பங்கை, பி.எப். கணக்கில் சேர்க்க இயலாத நிலை ஏற்படும். மேலும் பி.எப். கணக்கில் இருந்து கொரோனா முன் தொகையையும் எடுக்க இயலாது.
எனவே இதுவரை பி.எப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருப்பவர்கள் உடனடியாக www.epfindia.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று உங்கள் யூசர்நேம், பாஸ்வோர்டு உள்ளீடு செய்து, பி.எப். கணக்கில் ஆதார் எண்ணை ஆன்லைனிலேயே இணைத்துவிடலாம். பி.எப். கணக்கில் ஆதார் இணைக்கப்பட்ட பின்னர் கடந்த கால நிலுவைத்தொகையினை உங்களின் கணக்கில் நிறுவனம் சேர்த்துவிடும்.
இந்தநிலையில், வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.) கணக்கு வைத்திருப்போர் தங்களது கணக்கில் ஆதாரை ஜூன் 1-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையகம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி பலர் ஆதாரை இணைத்து வருகிறார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக காலநீட்டிப்பு வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்த நிலையில், செப்டம்பர் 1-ந் தேதி வரை காலநீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story