இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்காது - நிபுணர்கள் தகவல்

இந்தியாவில் கொரோனா 3-வது அலையில் குழந்தைகளை அதிகம் பாதிக்காது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தணிந்து வரும் நிலையில், 3-வது அலை விரைவில் தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் எயம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா மற்றும் டாக்டர்கள் அடங்கிய குழுவினர் குழந்தைகளிடம் செரோ ஆய்வை நடத்தியுள்ளனர். மாவட்ட அளவில் நடத்தப்படும் இந்த ஆய்வு 5 மாநிலங்களில் நடந்துள்ளது.
2 முதல் 17 வயது வரையிலான 700 குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் 3,809 பேர் என மொத்தம் 4,509 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
இந்த சர்வேயில் வியக்கத்தக்க முடிவுகள் வெளிவந்துள்ளன. அதாவது குழந்தைகளின் செரோ பரவல் 55.7 சதவீதமாகவும், பெரியவர்களின் விகிதம் 63.5 சதவீதமாகவும் இருந்துள்ளது. அந்தவகையில் புள்ளி விவர ரீதியாக குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை என கண்டறியப்பட்டு உள்ளது.
இவ்வாறு குழந்தைகளின் செரோ விகிதம் அதிகமாக இருப்பதாலும், பெரியவர்களுடன் ஒப்பிடக்கூடிய அளவில் இருப்பதாலும் கொரோனாவின் 3-வது அலை குழந்தைகளை அளவுக்கு அதிகமாக பாதிக்காது என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story