மத்திய பிரதேசத்தில் பரவிய டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு

மத்திய பிரதேசத்தில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
இந்தூர்,
இந்தியாவில் கடந்த ஆண்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் முதல் அலையை விட 2வது அலையில் கடும் விளைவுகள் ஏற்பட்டன. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு பூஞ்சை நோய் பாதிப்புகளும் ஏற்பட தொடங்கின. நாடு அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளையும் சந்தித்தது.
நாட்டில் கொரோனா வைரசானது உருமாறிய வகையில் பல்வேறு வடிவங்களை எடுத்து வருகிறது என நிபுணர்கள் கூறி வருகின்றனர். இங்கிலாந்து, பிரேசில், தென்ஆப்பிரிக்காவில் முதலில் அவை கண்டறியப்பட்டன. பின்பு பல நாடுகளுக்கும் அவை பரவின.
இந்நிலையில், டெல்டா வகை கொரோனா 2வது அலையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் திடீரென ஒரு சில நாடுகளில் டெல்டா பிளஸ் என்ற உருமாறிய கொரோனா வகை பரவி வருகிறது என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த வகை இந்தியாவில் இல்லை என்று நம்பப்பட்டு வந்தது.
இந்நிலையில், கேரளாவில் உள்ள பாலக்காடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள 3 பேருக்கு டெல்டா பிளஸ் வகை உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மத்திய பிரதேசத்திலும் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்து உள்ளார் என தெரிய வந்துள்ளது.
இதுபற்றி மாநில சுகாதார மந்திரி பிரபுராம் சவுத்ரி செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, இதுவரை 5 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
அவர்களில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட 4 பேர் நலமுடன் உள்ளனர். ஒருவர் உயிரிழந்து உள்ளார் என தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story