கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் - ராகுல்காந்தி


கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் - ராகுல்காந்தி
x
தினத்தந்தி 22 Jun 2021 9:24 AM GMT (Updated: 22 Jun 2021 9:24 AM GMT)

கொரோனாவின் முதல் 2 அலைகளில் மத்திய அரசு முன்னெச்சரிக்கை உடன் செயல்பட்டு இருந்தால் 90 சதவீத உயிரிழப்புகளை தடுத்திருக்க முடியும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா தொடர்பான வெள்ளை அறிக்கையை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இன்று வெளியிட்டு காணொலி மூலமாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள நாட்டிற்கு உதவுவதற்காகவே, வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. 3வது அலை வரும் என நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். முதல் மற்றும் இரண்டாவது அலையில் தோல்வி அடைந்தது போல் அல்லாமல், மத்திய அரசு மூன்றாவது அலையை எதிர்க்கொள்ள தயாராக வேண்டும். மத்திய அரசின் தவறுகளை அரசு திருத்திக் கொள்ளவே வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளேன். 

வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைவதால், 3வது அலையை தொடர்ந்து மேலும் பல அலைகள் வரும் என நான் கூறுகிறேன். இந்த நேரத்தில் தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியம். தடுப்பூசி போடும் திட்டத்தை வேகப்படுத்துவதுடன், அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும்.

மூன்றாவது அலை நிச்சயம் என்ற நிலையில்,அதை எதிர்கொள்ள தேவையான மருந்துகள், ஆக்சிஜன் படுக்கைகள், மருத்துவமனைகள் போன்றவற்றை தயார் செய்ய வேண்டும். முதல் மற்றும் இரண்டாவது அலையில் செய்த தவறுகளை அரசு மீண்டும் செய்து விடக்கூடாது. நேற்று அதிக அளவில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. இது அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வரை தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் கிடைக்கும் நிலை இருந்திருந்தால், நாட்டில்  90 சதவீத உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம். பிரதமரின்  கண்ணீர் உயிர்களை காப்பாற்றாது . கொரோனா உயிரிழப்புகள், அரசின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களை காட்டிலும் 5-6 மடங்கு அதிகம், எனினும் இது அரசியல் செய்வதற்குரிய நேரமில்லை என்றும், தடுப்பூசி அதிக அளவில் செலுத்த மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். 

Next Story