கோவேக்சின் 77.8% செயல் திறன் கொண்டது எனத் தகவல்

கோவேக்சின் தடுப்பூசி 77.8% செயல்திறன் கொண்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து கோவேக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்தியாவில் இந்த தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, கோவேக்சின் தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில், கோவேக்சின் தடுப்பூசியின் 3 ஆம் கட்ட பரிசோதனை தரவுகள் தேசிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கோவேக்சின் தடுப்பூசி 77.8 சதவிகிதம் செயல் திறன் கொண்டது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத் பயோடெக்கின் இந்த தரவுகளை நிபுணர் குழு மதிப்பாய்வு செய்து தேசிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது. 3-ஆம் கட்ட தரவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதன் மூலம், விரைவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளிக்கலாம் எனத்தெரிகிறது.
செப்டம்பர் மாதத்தில் உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் தங்கள் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்ப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் அண்மையில் கூறியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story