பிளஸ் 2 தேர்வு விவகாரம்: ஆந்திர அரசுக்கு சுப்ரீம் கோர்ட் 2 நாட்கள் கெடு

ஜூலை மாதத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்த ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளதாக, அம்மாநில சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோர்ட்டில் கூறினார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், மிசோரம், மணிப்பூர், திரிபுரா, தமிழகம் போன்ற மாநிலங்களில், 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்தும் தனி கமிட்டி அமைத்து மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. எனினும், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும் என்பதில் ஆந்திர அரசு தீவிரமாக உள்ளது. அதேசமயம் தேர்வுகள் தொடர்பான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிளஸ்2 தேர்வு தொடர்பாக முடிவு எடுக்காமல் இருக்கும் ஆந்திர அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்ததுடன், இரண்டு நாட்களில் முடிவு எடுக்கும்படி உத்தரவிட்டனர். ஒரு இறப்பு ஏற்பட்டால்கூட, நாங்கள் அரசையே பொறுப்பேற்கச் சொல்வோம் என்று கூறிய நீதிபதிகள், வழக்கை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story