விமான படை தளத்தில் குண்டு வெடிப்பு: ஆளில்லா விமானம் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்

விமான படை தளத்தில் குண்டு வெடிப்பு: ஆளில்லா விமானம் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்
ஜம்மு,
ஜம்மு விமான நிலையத்தில் நள்ளிரவு 1.45 மணிக்கு 5 நிமிட இடைவெளியில் முதல் குண்டுவெடிப்பு மேற்கூரையிலும், இரண்டாவது குண்டுவெடிப்பு தளத்திலும் ஏற்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பு பற்றி இந்திய விமானப் படை அதிகாரிகள் கூறியதாவது:-
"ஜம்மு விமானப் படை நிலையத்தின் தொழில்நுட்பப் பகுதியில் இன்று அதிகாலை குறைந்த சக்தி கொண்ட இரண்டு குண்டுகள் வெடித்தன. ஒரு குண்டுவெடிப்பு கட்டடத்தின் மேற்கூரையில் லேசான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்றொன்று திறந்தவெளியில் வெடித்தது. இதனால், எந்தவொரு சாதனமும் சேதமடையவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது."
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில்,
குண்டுவெடிப்பால் எந்தவொரு விமானமும் சேதமடையவில்லை. இரண்டு பணியாளர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஆளில்லா விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் (ஐ.ஏ.எஃப்) உயர் மட்ட விசாரணைக் குழு விரைவில் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்த உள்ளது.
வெஸ்டர்ன் ஏர் கமாண்டர் ஏர் மார்ஷல் வி.ஆர். சவுத்ரி ஜம்மு விமானநிலையத்தை பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்ய உள்ளார். இந்த சம்பவம் குறித்து அவருக்கு இந்திய விமானப்படை அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story