நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த 18-ந் தேதி அனைத்து கட்சி கூட்டம் - மத்திய அரசு ஏற்பாடு


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த 18-ந் தேதி அனைத்து கட்சி கூட்டம் - மத்திய அரசு ஏற்பாடு
x
தினத்தந்தி 15 July 2021 3:42 AM IST (Updated: 15 July 2021 3:42 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது பற்றி விவாதிக்க 18-ந் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு 3 நாடாளுமன்ற கூட்டத்தொடர்கள் முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டன. கடந்த ஆண்டு நடக்க வேண்டிய குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டது.

இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர், 5 மாநில சட்டசபை தேர்தல்கள் காரணமாக, முன்கூட்டியே முடிவடைந்தது.

இதையடுத்து, நடப்பு ஆண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர், வருகிற 19-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஆகஸ்டு 13-ந் தேதி வரை இந்த தொடர் நடைபெறும்.

முந்தைய ஓரிரு கூட்டத்தொடர்களில் மாநிலங்களவை காலையிலும், மக்களவை மாலையிலும் என தனித்தனி நேரங்களில் நடத்தப்பட்டன. ஆனால், இந்த தொடரில் இரு அவைகளும் ஒரே நேரத்தில் காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பிறகு நடக்கும் முதலாவது கூட்டத்தொடர் இதுவே ஆகும். 323 எம்.பி.க்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருப்பதாகவும், 23 எம்.பி.க்கள் ஒரு டோஸ் கூட போடவில்லை என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.

தடுப்பூசி போடாதவர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைய ஆர்.டி.-பி.சி.ஆர். கொரோனா பரிசோதனையை கட்டாயம் ஆக்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த நிலையில் மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது பற்றி விவாதிக்க மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டம் வருகிற 18-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இதில் பங்கேற்குமாறு நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்து இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

கூட்டத்தில், பிரதமர் மோடியும் பங்கேற்பார் என்று தெரிகிறது. கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பை மத்திய அரசு கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story