ஸ்ரீநகர் அருகே 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீர் ஸ்ரீநகர் அருகே உள்ள டன்மர் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரின் ஸ்ரீநகர் டன்மர் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர்.
பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். என்கவுண்டரில் கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளும் லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்று காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடுதல் வேட்டையில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story