பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி வசூல் 88 % அதிகரிப்பு


பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி வசூல் 88 % அதிகரிப்பு
x
தினத்தந்தி 19 July 2021 11:45 PM GMT (Updated: 20 July 2021 12:00 AM GMT)

பெட்ரோல் ஒரு லிட்டருக்கான கலால் வரி ரூ.19.98-ல் இருந்து ரூ.32.9 ஆகவும், டீசல் ஒரு லிட்டருக்கான கலால் வரி ரூ.15.83-ல் இருந்து ரூ.31.8 ஆகவும் உயர்த்தப்பட்டன.

புதுடெல்லி, 

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு உலகளாவிய கச்சா எண்ணெய் தேவை குறைந்ததால் சர்வதேச சந்தையில் அதன் விலை வெகுவாக சரிந்தது. அதைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டது.

பெட்ரோல் ஒரு லிட்டருக்கான கலால் வரி ரூ.19.98-ல் இருந்து ரூ.32.9 ஆகவும், டீசல் ஒரு லிட்டருக்கான கலால் வரி ரூ.15.83-ல் இருந்து ரூ.31.8 ஆகவும் உயர்த்தப்பட்டன. இதனால், கடந்த 2020-21-ம் ஆண்டில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி வசூல் ரூ.3.35 லட்சம் கோடியாக உயர்ந்ததாகவும், இது 88 சதவீத அதிகரிப்பு எனவும் மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை ராஜாங்க மந்திரி ரமேஷ்வர் தெலி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நேற்று ஒரு கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதைத் தெரிவித்தார்.

2018-19-ல் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி வசூல் ரூ.2.13 லட்சம் கோடியாக இருந்ததாகவும் அவர் கூறினார். 2020-21-ம் ஆண்டில் கலால் வரி ரூ.3.35 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருந்திருக்கும். ஆனால் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் பெட்ரோல், டீசல் விற்பனை பாதிக்கப்பட்டதால் கலால் வரி வசூல் இந்த அளவில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story