கொரோனா 2ம் அலை: ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு இல்லை; மத்திய அரசு பதில்


கொரோனா 2ம் அலை:  ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு இல்லை; மத்திய அரசு பதில்
x
தினத்தந்தி 20 July 2021 3:51 PM GMT (Updated: 20 July 2021 3:51 PM GMT)

நாட்டில் கொரோனா 2ம் அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.



புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா முதல் அலையை காட்டிலும், இந்த ஆண்டில் ஏற்பட்ட கொரோனா 2வது அலையில் அதிக அளவு பாதிப்புகளும், உயிரிழப்புகளும் காணப்பட்டன.  கடந்த ஏப்ரல் தொடக்கத்தில் தொடங்கிய இந்த அலையானது, கடந்த மே மாதத்திற்குள் பல பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது.

இதுதவிர, நாட்டின் பல பகுதிகளில், படுக்கை வசதிகள், வென்டிலேட்டர்கள், ரெம்டெசிவிர், தடுப்பூசிகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபயோக பொருட்களின் பற்றாக்குறை காணப்பட்டது.  ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் பாதிக்கப்பட்டு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழந்த சம்பவங்களும் ஏற்பட்டன.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதில், இன்று 2வது நாளாக நடந்த கூட்டத்தில் கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

அப்போது நாட்டில் கொரோனாவால் பலியானவர்களின் மரணம் குறித்து காங்கிரஸ் கட்சியின் கே.சி. வேணுகோபால் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதார மற்றும் குடும்பநல இணை மந்திரி பாரதி ப்ரவின் பவார், நாட்டில் 2ம் அலையின் போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என கூறியுள்ளார்.

எனினும், கொரோனா முதல் அலையை விட 2வது அலையில் ஆக்சிஜன் தேவை அதிகரித்திருந்தது என குறிப்பிட்டு பேசிய ப்ரவின் பவார், முதல் அலையில் 3,095 மெட்ரிக் டன்னாக இருந்த ஆக்சிஜன் தேவை இரண்டாவது அலையில் 9 ஆயிரம் மெட்ரிக் டன்னாக அதிகரித்ததாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர், சுகாதாரத்துறை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மாநிலங்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.


Next Story