கேரளாவில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு


கேரளாவில் மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு
x
தினத்தந்தி 21 July 2021 1:51 PM GMT (Updated: 21 July 2021 1:51 PM GMT)

கேரளாவில் ஜிகா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 41- ஆக உயர்ந்துள்ளது.

திருவனந்தபுரம், 

கேரளாவில் கொரோனா வைரஸ் 2-வது அலையின் பாதிப்பே இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதற்குள் ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  ஜிகா வைரஸ் பாதிக்கப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தோலில் நமைச்சல், அரிப்பு, உடல்வலி, மூட்டுகளில் வலி, தலைவலி போன்றவை ஏற்படக்கூடும். 

ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா வைரஸ், மஞ்சள் காய்ச்சல், டெங்கு காய்ச்சலும் பரவுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு பரவினால், அவர் மூலம் வயிற்றில் உள்ள சிசுவும் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவு ஏற்படலாம். இதனால் குறைப்பிரசவம் அல்லது கருச்சிதைவும் கூட சில நேரங்களில் ஏற்படலாம். ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள்வரை உடலில் இருக்கும் பாதிப்பு ஏற்பட்ட 2 முதல் 7 வது நாளில் அறிகுறிகள் காணப்படும். 

இந்நிலையில் கேரளாவில் இன்று மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதன் மூலம் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. ஜிகா வைரஸ் பாதிப்பால் தற்போது 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

Next Story