நாடாளுமன்ற கூட்டத்தொடர் மத்தியில் ஜந்தர் மந்தரை போராட்ட களமாக்கிய விவசாயிகள்


Image courtesy : indianexpress.com
x
Image courtesy : indianexpress.com
தினத்தந்தி 22 July 2021 10:47 AM GMT (Updated: 22 July 2021 10:47 AM GMT)

ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம், எங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையிலான தூரம் தொடர்ந்து குறைந்து வருகிறது என விவசாய அமைப்புகள் கூறி உள்ளன.

புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டங்கள் நடந்து வருகிறது. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு வருகின்றனர்.

இந்த விவசாயிகளுடன் மத்திய அரசு 10-க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. 3 புதிய சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால் இந்த பிரச்சினையில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதையொட்டி மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாடாளுமன்றத்துக்கு வெளியே தினந்தோறும் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர். ஆனால் விவசாயிகளின் இந்த திட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி அளிக்கவில்லை. கொரோனாவை காரணம் காட்டி விவசாயிகளுக்கு இந்த போராட்டத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தங்கள் போராட்டக்களத்தை டெல்லி ஜந்தர் மந்தருக்கு மாற்ற விவசாயிகள் முடிவு செய்தனர். அதாவது வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி இன்று முதல் தினந்தோறும் ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என சம்யுக்தா கிசான் மோர்ச்சா அறிவித்தது.

இந்த போராட்டத்துக்காக டெல்லி சிங்கு எல்லையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் பஸ்களில் விவசாயிகள் ஜந்தர் மந்தருக்கு சென்றனர்.

அங்கு ‘விவசாயி நாடாளுமன்றம்’ நிகழ்ச்சியை அவர்கள் நடத்துகிறார்கள். இதற்காக தினந்தோறும் 200 போராட்டக்காரர்கள் சிங்கு எல்லையில் இருந்து ஜந்தர் மந்தர் செல்ல உள்ளதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டத்தையொட்டி ஜந்தர் மந்தரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சிங்கு எல்லையில் இருந்து விவசாயிகளை ஜந்தர் மந்தர்  ஏற்றிச் செல்லும் பஸ்களிளை டெல்லி போலீசார் இன்று தடுத்து நிறுத்தினர். போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள்  பாதுகாப்பு ஏற்பாடுகளின் படி  பஸ்கள் சோதனை செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். 

200 விவசாயிகள் அடங்கிய குழு போராட்டம் நடத்த ஜந்தர் மந்தர் வந்தடைந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

சிங்கு எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஜந்தர் மந்தரை நோக்கிச் சென்றதால் தேசிய தலைநகரின் பல பகுதிகளில்  இன்று  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக போலீசார்"மிகுந்த எச்சரிக்கையுடன்" இருப்பதாக மூத்த போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

வேளாண் மந்திரி  நரேந்திர சிங் தோமர், எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுடன் பேச மத்திய  தயாராக உள்ளது . நாங்கள் அவர்களுடன் கடந்த காலத்திலும் பேசினோம். மோடி அரசு ஒரு விவசாயிகளின் நண்பன் என்று கூறினார்.

பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ) தலைவர் ராகேஷ் டிக்கைட் நிருபர்களிடம் கூறியதாவது;-

'எங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையிலான தூரம் தொடர்ந்து குறைந்து வருகிறது, நாங்கள் இப்போது சில நூறு மீட்டர் தொலைவில் இருக்கிறோம். இந்த மரத்தின் அடியில் தினமும் 200 விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்க வருவார்கள். ' இது ஒரு வரலாற்று மரமாக இருக்கும்' என்று அங்கு  இருந்த வேப்பமரத்தைக் குறிப்பிட்டார்.

விவசாய சங்கத் தலைவர் ஹன்னன் மொல்லா கூறும் போது எங்கள் கோரிக்கைகளை எழுப்ப அனைத்து எம்.பி.க்களுக்கும் நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம், ஆனால் நாடாளுமன்றம் எங்கள் பிரச்சினைகளை எடுத்துக் கொள்ளவில்லை என கூறினார்.

யோகேந்திர யாதவ் கூறியதாவது:-

விவசாயிகள்  முட்டாள்கள் அல்ல என்று அரசாங்கத்திற்கு  நிருபிக்க விவசாயிகள் ஜந்தர் மந்தருக்கு வந்துள்ளனர். இங்கிலாந்து பாராளுமன்றம் எங்கள் பிரச்சினைகளை விவாதிக்கிறது, ஆனால் எங்கள் அரசு விவாதிக்கவில்லை என்று கூறினார்.

Next Story