ஒலிம்பிக் போட்டி: வீரர்களின் சாதனை நிகழ்வுகளை எதிர்நோக்குகிறோம் - பிரதமர் மோடி


ஒலிம்பிக் போட்டி: வீரர்களின் சாதனை நிகழ்வுகளை எதிர்நோக்குகிறோம் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 23 July 2021 10:18 AM GMT (Updated: 23 July 2021 10:18 AM GMT)

டோக்கியோ ஒலிம்பிக்கில், உலகின் சிறந்த விளையாட்டு வீரர்களின் நம்பமுடியாத சாதனை நிகழ்வுகளை நாங்கள் எதிர்நோக்குகிறோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி தொடங்கியுள்ளது. இதில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ஆஸ்திரேலியா உள்பட 204 நாடுகளை சேர்ந்த 11,200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 33 விளையாட்டுகளில் மொத்தம் 339 தங்கப்பதக்கத்துக்கு மோதுகிறார்கள். 

இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து 127 வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்று இருக்கிறார்கள். ஒரு ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளின் அதிகபட்ச எண்ணிக்கை இது தான். மொத்தம் 18 விளையாட்டுகளில் பதக்கத்துக்காக மல்லுகட்ட காத்திருக்கிறார்கள். இதில் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, பேட்மிண்டன், வில்வித்தை, ஆக்கி ஆகிய பந்தயங்களில் இந்தியா பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது.

ஜப்பானில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக தொடக்க நாள் நிகழ்ச்சியில் பெரும்பாலான இந்திய வீரர்கள் பங்கேற்கவில்லை. அணிவகுப்பில் ஆக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங் மட்டும் பங்கேற்றார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடங்கிய நிலையில் பிரதமர் மோடி ஜப்பான் பிரதமருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள பதிவில்,

 "டோக்கியோ 2020 ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸை மிகச் சிறப்பாக நடத்துவதற்கு பிரதமர் யோஷிஹைட் சுகாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில், உலகின் சிறந்த விளையாட்டு வீரர்களின் நம்பமுடியாத சாதனை நிகழ்வுகளை நாங்கள் எதிர்நோக்குகிறோம் என பதிவிட்டுள்ளார்.

Next Story