துப்பாக்கியுடன் செல்பி எடுக்க முயன்ற புதுப்பெண் குண்டு பாய்ந்து பலி


துப்பாக்கியுடன் செல்பி எடுக்க முயன்ற புதுப்பெண் குண்டு பாய்ந்து பலி
x
தினத்தந்தி 24 July 2021 5:40 PM IST (Updated: 24 July 2021 5:40 PM IST)
t-max-icont-min-icon

துப்பாக்கியுடன் செல்பி எடுக்க முயன்ற இளம்பெண், குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ

உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குப்தா. இவர் மகன் ஆகாஷ் குப்தா. ஆகாஷூக்கும் ராதிகா என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. ராஜேஷ் குப்தா தனது வீட்டில் ஒற்றைக் குழல் துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். செல்பி எடுப்பதில் ஆர்வம் கொண்ட ராதிகாவுக்கு துப்பாக்கியை கையில் வைத்தபடி புகைப்படம் எடுக்க ஆசை.

இந்நிலையில் குண்டு நிரப்பப்பட்ட ஒற்றைக்குழல் துப்பாக்கியை தனது முன் நிறுத்தியபடி, டிரிக்கரில் கையை வைத்துக்கொண்டு செல்பி எடுத்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக டிரிக்கரில் கை அழுத்தியதால் குண்டு வெடித்தது. சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் சாய்ந்து கிடந்தார், ராதிகா.

இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து ராஜேஷ் குப்தா கூறும்போது, ‘பஞ்சாயத்து தேர்தல் காரணமாக போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கியை என் மகன் வீட்டுக்கு வாங்கி வந்தார். அப்போது மருமகள் அதைக் கொண்டு செல்பி எடுக்கும்போது தவறுதலாக குண்டு பாய்ந்து உயிரிழந்துவிட்டார்’ என்று கூறியுள்ளார்.

அவர் துப்பாக்கியுடன் எடுத்த செல்பி புகைப்படத்தையும் அவர்கள் காவல் நிலையத்தில் சமர்பித்துள்ளனர். இந்நிலையில் ராதிகாவின் தந்தை இந்த மரணம் குறித்து தனது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Next Story