மாநிலங்களிடம் 2.60 கோடி தடுப்பூசி கையிருப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்


மாநிலங்களிடம் 2.60 கோடி தடுப்பூசி கையிருப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
x
தினத்தந்தி 4 Aug 2021 9:21 AM GMT (Updated: 4 Aug 2021 9:21 AM GMT)

மாநிலங்களிடம் 2.60 கோடி தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. இதில் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த 21-ந்தேதி அமல்படுத்திய மத்திய அரசு, இந்த பணிகளை மேலும் முடுக்கி விட்டுள்ளது.

இந்நிலையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 2.60 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், 

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 50,37,22,630 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. அதில், 48,19,75,798 தடுப்பூசிகளை மாநிலங்கள் உபயோகித்துள்ளன. இன்னும் 2 கோடியே 60 லட்சத்து 17 ஆயிரத்து 573 டோஸ் தடுப்பூசிகள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளின் கையிருப்பில் உள்ளன.

மாநில அரசுகளுக்கு கூடுதலாக 49,19,780 தடுப்பூசிகளை மத்திய அரசு தரப்பிலிருந்து அனுப்பப்பட்டுள்ளன. மேலும், நாடு முழுவதும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு இதுவரை 48 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

Next Story