விருப்பத்திற்கு மாறாக பாலியல் உறவு ; மனைவி கணவனிடம் விவாகரத்து கோரலாம்- கேரள ஐகோர்ட்டு


விருப்பத்திற்கு மாறாக பாலியல் உறவு ; மனைவி கணவனிடம் விவாகரத்து கோரலாம்- கேரள ஐகோர்ட்டு
x
தினத்தந்தி 7 Aug 2021 6:08 AM GMT (Updated: 7 Aug 2021 6:08 AM GMT)

மனைவியின் விருப்பத்திற்கு மாறாக, பாலியல் உறவு கொள்ளும் கணவனிடம் இருந்து மனைவி விவாகரத்து கோரலாம் என கேரள ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம்

கேரளாவை சேர்ந்த  ரியல் எஸ்டேட் அதிபர்  ஒருவருக்கு 1995 ஆம் ஆண்டு டாக்டர் ஒருவர் தனது மகளை திருமணம் செய்து வைத்துள்ளார். ஒரு கார், வீடு, 501 சவரன் நகை அவருக்கு வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டது. மேலும்  ரியல்  எஸ்டேட்  அதிபரின்  தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மகளுக்காக அவரது பெற்றோர் மேலும் ரூ.77 லட்சத்தையும் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் திடீர் என  ரியல் எஸ்டேட் அதிபருக்கும்  அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ரியல் எஸ்டேட்  அதிபர் மனைவி, குடும்ப நல நீதிமன்றத்தில் கணவனிடம் இருந்து விவாகரத்து கோரினார். அவர் தாக்கல் செய்த மனுவில், தனது விருப்பமின்றி தன் கணவர் பாலியல் உறவில் ஈடுபடுவதாகவும்  உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் கடந்த 2009 ஆம் ஆண்டு அவர்களுக்கு விவாகரத்து வழங்கியது.

இதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் முகமது முஸ்டாக் மற்றும் கவுசர் எடப்பாகத் முன் விசாரணைக்கு வந்தது.

 நீதிபதிகள், மனைவியின் விருப்பமில்லாமல் பாலியல் உறவில் ஈடுபடும் கணவனை தண்டிக்க சட்டத்தில் வழியில்லை என்றாலும் மனைவியின் விருப்பத்தை மதிக்காமல் அவரை துன்புறுத்துவது பாலியல் வன்கொடுமையில் தான் சேரும். இதுபோன்ற வழக்குகளில் மனைவி விவாகரத்து கோருவதற்கு, கணவனின் இந்த நடத்தை வழி வகுக்கிறது. இந்த வழக்கில் குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய உத்தரவு உறுதி செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.

Next Story