கொரோனா தடுப்பூசிகள்; மாநிலங்களின் கையிருப்பில் 2.42 கோடி: மத்திய அரசு

நாட்டிலுள்ள மாநிலங்களின் கையிருப்பில் 2.42 கோடி கொரோனா தடுப்பூசிகள் உள்ளன என மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகளை அவசரகால தேவைக்கு பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. கொரோனா 2வது அலைக்கு பின் மக்களிடையே தடுப்பூசி போட்டு கொள்ளும் ஆர்வம் அதிகரித்தது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களின் கையிருப்பில் உள்ள கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதுபற்றி மத்திய சுகாதார துறை வெளியிட்ட செய்தியில், நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை, 52.37 கோடிக்கும் கூடுதலான (52,37,50,890) கொரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவச அடிப்படையில் வழங்கியுள்ளது.
இதுதவிர, கூடுதலாக 8,99,260 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன. இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 50,32,77,942 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஏறக்குறைய 2.42 கோடி (2,42,87,160) கொரோனா தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story