கொரோனா தொற்று முடிவடையவில்லை; மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் சுதந்திர தின உரையில் ஜனாதிபதி வலியுறுத்தல்


கொரோனா தொற்று முடிவடையவில்லை; மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் சுதந்திர தின உரையில் ஜனாதிபதி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 Aug 2021 2:51 AM GMT (Updated: 15 Aug 2021 2:51 AM GMT)

கொரோனா பெருந்தொற்று முடிவடையாததால் நாட்டு மக்கள் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

‘நம் நாட்டில், வரலாற்றிலேயே பெரிய தடுப்பூசி திட்டம் அமல்படுத்தப்பட்ட போதும், கொரோனா 2-வது அலையால் மிகவும் பாதிக்கப்பட்டோம். பல உயிர்களை காப்பாற்ற முடியவில்லை. நிறையப் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களின் துயரங்களை நான் பகிர்ந்துகொள்கிறேன்.

கொரோனா பெருந்தொற்று இன்னும் முடிவடையாத நிலையில் நாட்டு மக்கள் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியே சிறந்த பாதுகாப்பு. உலகிலேயே மிகப் பெரிய தடுப்பூசி போடும் பணியில் நம் நாட்டில் இதுவரை 50 கோடிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள அனைவரும் தவறாது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

நம் நாட்டை உருவாக்கிய தலைவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப, இந்தியர்களாகிய நாம், ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளோம். நமது நாடாளுமன்றம், ஜனநாயகத்தின் ஆலயமாக உள்ளது. அது, நாட்டு மக்கள் நலனுக்கான விவாதங்கள், கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான உயர்ந்த அமைப்பாகத் திகழ்கிறது.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்வதற்காகவே புதிய வேளாண் சட்டங்கள் போன்ற சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன.

நடந்து முடிந்த ஒலிம்பிக் விளையாட்டில் நம் நாட்டு வீரர், வீராங்கனைகளின் சிறப்பான செயல்பாடு பாராட்டுக்குரியது.

ஜம்மு காஷ்மீரில் புதிய விடியல் ஏற்பட்டுள்ளது. அங்கு ஜனநாயகத்தின் மீதும், சட்டத்தின் ஆட்சியின் மீதும் நம்பிக்கை உள்ளவர்களுடன் மத்திய அரசு இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளது.

அங்கு ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்களைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேற அம்மாநில மக்கள், குறிப்பாக இளைஞர்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story