விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு


விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
x
தினத்தந்தி 4 Oct 2021 5:01 AM GMT (Updated: 4 Oct 2021 5:36 AM GMT)

மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மற்றும் 15 பேர் மீது கொலை மற்றும் வன்முறையைத் தூண்டியதற்காக போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

லக்னோ

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் லகிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர்.

இதற்கிடையில், மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா லகிம்பூர் கேரி மாவட்டத்தின் திகுனியா அருகே உள்ள பன்வீர்பூரை சேர்ந்தவர் ஆவார். இந்த கிராமத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மாநில துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

எனவே அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியா என்ற இடத்தில் திரண்டனர். அப்போது அந்த வழியாக பா.ஜ.க- வினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். 

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பா.ஜ.க.வினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதனால், அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். 

காயம் அடைந்தவர்களில்   இன்று  மேலும் ஒருவர் பலியானார். உள்ளூர் பத்திரிகையாளர் ராம் காய்சியப் என்பவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். 

இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வன்முறை மேலும் பரவாமல் இருக்க லகிம்பூர் கேரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மற்றும் 15 பேர் மீது கொலை மற்றும் வன்முறையைத் தூண்டியதற்காக உத்தரப்பிரதேச  போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று காலை  லக்னோவில் உள்ள அவரது வீட்டிற்கு முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.  வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்க லகிம்பூர் கேரி செல்வதாக இருந்த  சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அவர் தர்ணாவில் ஈடுபட்டார்.  அவரது வீட்டிற்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இது குறித்து  அகிலேஷ் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகள் மீதான கொடுமைகள் ஆங்கிலேய  ஆட்சியின் போது நடந்ததை விட அதிகமாக உள்ளது. இது ஹிட்லர் செய்ததை விட கொடுமை. மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என கூறினார்.

Next Story