கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தேவையா? - நிபுணர் குழு ஆராய்வதாக மந்திரி தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 Dec 2021 1:52 AM GMT (Updated: 1 Dec 2021 1:52 AM GMT)

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தேவையா என்பது குறித்து நிபுணர் குழு ஆராய்வதாக மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

புதிய வகை வைரசான ஒமிக்ரான் பல நாடுகளில் பரவி வருகிற நிலையில், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவது தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை ராஜாங்க மந்திரி பாரதி பிரவிண் பவார் எழுத்து மூலம் நேற்று பதில் அளித்தார். அதில் அவர், “கிடைக்கக்கூடிய அறிவியல் ஆதாரங்களின்படி, தற்போதைய கொரோனா தடுப்பூசிகளில் பெரும்பாலானவை நோயை மாற்றும் தன்மை கொண்டவை, இதில் தடுப்பூசி போடப்பட்ட நபர்களில் இறப்பு மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது கணிசமாக குறைக்கப்படுகிறது. இருப்பினும், தடுப்பூசி போடப்பட்ட நபர்களில் ஒரு பகுதியினர் இன்னும் லேசான அல்லது அறிகுறியற்ற நோய்த்தொற்றுகளைக் கொண்டிருக்கலாம். எனவே, முககவசங்களை கண்டிப்பாகப் பயன்படுத்துதல், சமூக விலகலைப் பின்பற்றுதல் மற்றும் கைகளைக் கழுவுதல் உட்பட எல்லா நேரங்களிலும் வைரசுக்கு எதிரான பொருத்தமான நடத்தையை பின்பற்றுவது முக்கியம். சுகாதார அமைச்சகமும், ஐ.சி.எம்.ஆரும் இணைந்து இந்தியாவின் கொரோனா தடுப்பூசி டிராக்கரை உருவாக்கியுள்ளன.

கொரோனா தடுப்பூசியின் டோஸ் அட்டவணை மற்றும் பூஸ்டர் டோஸ் தேவை மற்றும் அதை நியாயப்படுத்துவது தொடர்பான அறிவியல் ஆதாரங்களை நிபுணர் குழு (கொரோனா தடுப்பூசி தொடர்பான தேசிய தொழில் நுட்ப குழு மற்றும் தேசிய நிபுணர் குழு) ஆராய்ந்து வருகிறது” என கூறப்பட்டுள்ளது.

Next Story