ஒமைக்ரான் தொற்று பாதிப்பு: நாளை ஆலோசனை கூட்டம் - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை


ஒமைக்ரான் தொற்று பாதிப்பு: நாளை ஆலோசனை கூட்டம் - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
x
தினத்தந்தி 2 Dec 2021 5:24 PM GMT (Updated: 2 Dec 2021 5:24 PM GMT)

ஒமைக்ரான் தொற்று பாதிப்பு தொடர்பாக நாளை ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்தது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:-

ஒமைக்ரான் தொற்று பாதிப்பு விவகாரம் தொடர்பாக நாளை ஒரு ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளோம். நிபுணர்களின் கருத்துக்களை கேட்டறிந்து வருகிறோம். ஒமைக்ரான் குறித்து மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி வருகிறோம்.

நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறோம். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் இதைப் பற்றி கூறியுள்ளோம். ஒமைக்ரான் தொற்று உறுதியானவர்களின் தொடர்புகளை கண்காணித்து கண்டுபிடிப்பதே எங்கள் கடமை. மாநிலத்தில் ஏற்கனவே சர்வதேச விமான பயணிகளை கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story