அரசு திட்டத்தின் கீழ் கிடைக்கும் ரூ. 35 ஆயிரம் பணம் பெற சொந்த சகோதரியை திருமணம் செய்த நபர்


அரசு திட்டத்தின் கீழ் கிடைக்கும் ரூ. 35 ஆயிரம் பணம் பெற சொந்த சகோதரியை திருமணம் செய்த நபர்
x
தினத்தந்தி 17 Dec 2021 1:59 AM GMT (Updated: 17 Dec 2021 2:49 AM GMT)

அரசு திட்டத்தின் கீழ் வரும் பணத்தை பெற நபர் தனது சொந்த சகோதரியையே திருமணம் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் அம்மாநில சமூக நலத்துறை சார்பில் ஏழை, எளியோருக்கு மாநில அரசு சார்பில் திருமணம் செய்து வைக்கும் திட்டம் அமலில் உள்ளது. 

இந்த திட்டத்தின் கீழ் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு 35 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும். இதில், 20 ஆயிரம் ரூபாய் நேரடியாக மணப்பெண்ணின் வங்கிக்கணக்கில் அரசு சார்பில் செலுத்தப்படும். எஞ்சிய தொகை பணமாகவும், பரிசுப்பொருட்களாகவும் வழங்கப்படும்.

இதற்கிடையில், இந்த திருமண திட்டத்தின் கீழ் பல்வேறு மோசடிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், இந்த திருமண திட்டத்தின் கீழ் அரசு வழங்கும் 35 ஆயிரம் ரூபாய் பணத்தை பெறுவதற்காக நபர் தனது சொந்த சகோதரியையே திருமணம் செய்த சம்பவம் அம்மாநிலத்தில் அரங்கேற்றி உள்ளது.

அம்மாநிலத்தின் பெரோசாபாத் மாவட்டம் டுயுன்லா பகுதியில் அரசின் திருமண திட்டத்தின் கீழ் கடந்த 11-ம் தேதி 51 தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் மற்றும் அவர்கள் அளித்த ஆவணங்களை அந்தந்த கிராம மக்களின் உதவியுடன் சரிபார்க்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அப்போது, ஒரு தம்பதியின் புகைப்படத்தை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு நபர் தனது சொந்த சகோதரியையே திருமணம் செய்துகொண்டுள்ளார் என்பதை கிராம மக்கள் கண்டுபிடித்தனர். திருமணம் செய்துகொண்ட இருவரும் சகோதர - சகோதரிகள் என அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, அரசு திட்டத்தின் கீழ் கிடைக்கும் பணத்தை பெற சொந்த சகோதரியையே திருமணம் செய்த அந்த நபர் மீது போலீசாரில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரை தொடர்ந்து அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், திருமணத்தின் போது அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப்பொருட்களும் திரும்பப்பெறப்பட்டுள்ளன. இந்த மோசடியில் ஈடுபட்ட நபர் மற்றும் அவரது சகோதரியின் பெயர்களை அதிகாரிகள் தரப்பில் வெளியிடவில்லை.

Next Story