3 டோஸ் தடுப்பூசி போட்ட மும்பை வாலிபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு


3 டோஸ் தடுப்பூசி போட்ட மும்பை வாலிபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
x
தினத்தந்தி 18 Dec 2021 7:42 PM GMT (Updated: 18 Dec 2021 7:42 PM GMT)

அமெரிக்காவில் இருந்து மும்பை திரும்பிய வாலிபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அவர் 3 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்.

வாலிபருக்கு ஒமைக்ரான்

மராட்டியத்தில் உருமாறிய ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து உள்ளது. இதில் நேற்று முன்தினம் மாநிலத்தில் புதிதாக 8 பேருக்கு அந்த நோய் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில் ஒருவர் மும்பையை சேர்ந்த 29 வயது வாலிபர் ஆவார். இவர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இருந்து கடந்த மாதம் 9-ந் தேதி மும்பை வந்தார்.

அப்போது விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் ஒமைக்ரான் பாதிப்பை கண்டறிய அவரது சளி மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

3 டோஸ் தடுப்பூசி

இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட வாலிபர் முதல் மற்றும் 2-வது தடுப்பூசி போட்டுக்கொண்டது மட்டுமின்றி 3-வது டோஸ் (பூஸ்டர்) பைசர் தடுப்பூசியும் போட்டு இருக்கிறார். எனினும் அவரை ஒமைக்ரான் தொற்றிக்கொண்டு உள்ளது. அதேவேளையில் தடுப்பூசி போட்டதால் அவருக்கு நோய் அறிகுறிகள் எதுவுமில்லை. தற்போது வாலிபர் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளார். இந்த தகவலை மும்பை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

மராட்டியத்தில் நேற்று முன்தினம் வரை 40 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


Next Story