பஞ்சாப்: விவசாயிகள் போராட்டத்தால் 280-க்கும் மேற்பட்ட ரயில்சேவைகள் பாதிப்பு.!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 23 Dec 2021 11:18 AM GMT (Updated: 23 Dec 2021 11:18 AM GMT)

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக தங்கள் மீது போடப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள், முழு கடன் தள்ளுபடி மற்றும் ஒரு வருட விவசாய எதிர்ப்பு சட்டத்தின் போது இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக தங்கள் மீது போடப்பட்டுள்ள கிரிமினல் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தால், கடந்த 24 மணி நேரத்தில், 280-க்கும் மேற்பட்ட ரயில்களின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி நீரஜ் சர்மா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். "கடந்த நான்கு நாட்களாக நடந்த போராட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட ரயில்களின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளன" என்றும் சர்மா கூறினார்.

திங்கட்கிழமை முதல் பெரோஸ்பூர், டார்ன் தரன், அமிர்தசரஸ் மற்றும் ஹோஷியார்பூர் ஆகிய இடங்களில் விவசாயிகள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் விவசாயிகள் நேற்று, மோகா மற்றும் பாசில்கா ரயில் நிலையங்களுக்கும் தங்கள் போராட்டத்தை விரிவுபடுத்தியுள்ளர். பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் குறுகிய தூர நிலையங்களுக்கு இடையே ரயில்களை இயக்க முயற்சித்து வருகிறோம் என்று  நீரஜ் சர்மா கூறினார்.


Next Story