இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 781 ஆக உயர்வு..!!


இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 781 ஆக உயர்வு..!!
x
தினத்தந்தி 29 Dec 2021 4:11 AM GMT (Updated: 29 Dec 2021 4:11 AM GMT)

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 781 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ந்தேதி முதன்முதலாக தென்பட்ட ஒமைக்ரான் வைரஸ், ஒரே மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் மின்னல் வேகத்தில் பயணித்திருக்கிறது.

இந்தியாவில் கடந்த 2-ந்தேதி நுழைந்தது, இந்த வைரஸ். கர்நாடக மாநிலத்தில் அன்று காலடி எடுத்து வைத்த ஒமைக்ரான், இந்த 27 நாளில் மராட்டியம், டெல்லி, கேரளா, தெலுங்கானா, குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ஒடிசா, ஆந்திரா, மேற்கு வங்காளம், அரியானா, உத்தரகாண்ட், சண்டிகார், காஷ்மீர், உத்தரபிரதேசம், கோவா, இமாசலபிரதேசம், லடாக், மணிப்பூர் என தனது பயணத்தை தொடர்கிறது.

நேற்று வரையில் இந்த வைரஸ் 600 பேருக்கும் மேல் பாதித்திருந்தது. இந்த சூழலில் புதுச்சேரியில் நேற்று ஒமைக்ரான் நுழைந்திருக்கிறது. அங்கு 80 வயது முதியவர், 20 வயது இளைஞர் என 2 பேருக்கு இந்த வைரஸ் பாதித்திருக்கிறது. இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே 34 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ள நிலையில் நேற்று மேலும் 11 பேருக்கு இந்த தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இங்கு இந்த தொற்றுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் இந்த ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை தற்போது 781 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையாக டெல்லியில் 238 பேருக்கும், மராட்டிய மாநிலத்தில் 167 பேரும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும்  குஜராத்தில் 73 பேருக்கும், கேரளாவில் 65 பேருக்கும், தெலுங்கானாவில் 62 பேருக்கும், ராஜஸ்தானில் 46 பேருக்கும், கர்நாடகத்தில் 34 பேருக்கும், தமிழ்நாட்டில் 34 பேருக்கும், அரியானாவில் 12 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் 11 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 9 பேருக்கும், ஒடிசாவில் 8 பேருக்கும்,  ஆந்திராவில் 6 பேருக்கும், உத்தரகாண்டில் 4 பேருக்கும், சண்டிகாரில் 3 பேருக்கும், ஜம்மு காஷ்மீரில் 3 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 2 பேருக்கும், கோவாவில் ஒருவருக்கும், இமாச்சல பிரதேசத்தில் ஒருவருக்கும், லடாக்கில் ஒருவருக்கும், மணிப்பூரில் ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் டெல்லியில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 238 பேரில் இதுவரை 57 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மராட்டிய மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 167 பேரில் இதுவரை 72 பேர் குணமடைந்துள்ளனர் என்றும்  மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Next Story