பூஸ்டர் டோசாக எந்த தடுப்பூசி போடுவது? மத்திய அரசு விரைவில் முடிவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 30 Dec 2021 11:28 PM GMT (Updated: 30 Dec 2021 11:28 PM GMT)

முதல் 2 டோஸ் போட்ட தடுப்பூசியையே முன்எச்சரிக்கை டோசாக போடுவதா அல்லது வேறு தடுப்பூசியை போடுவதா என்பது குறித்து ஆராயப்படுகிறது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிற நிலையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி, முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசி என்ற பெயரில் வரும் ஜனவரி 10-ந் தேதி முதல் போடப்படுகிறது. முதல் கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், இணைநோயுடன் போராடுகிற 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த முன் எச்சரிக்கை தடுப்பூசி போடப்படும்.

ஆனால் என்ன தடுப்பூசி மருந்து பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர் முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசி தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு தரவுகளையும் ஆராய்ந்து வருகிறோம். முதல் 2 டோஸ் போட்ட தடுப்பூசியையே முன்எச்சரிக்கை டோசாக போடுவதா அல்லது வேறு தடுப்பூசியை போடுவதா என்பது குறித்து ஆராயப்படுகிறது. ஜனவரி 10-ந் தேதிக்குள் இதில் தெளிவான பரிந்துரையை வழங்கி விடுவோம்” என தெரிவித்தார்.

Next Story