லாவண்யா தற்கொலை விவகாரம்: மாணவியின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் மனு


லாவண்யா தற்கொலை விவகாரம்: மாணவியின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் மனு
x
தினத்தந்தி 3 Feb 2022 7:10 AM GMT (Updated: 3 Feb 2022 7:10 AM GMT)

அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் அவரின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

புதுடெல்லி,

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மனைவி கனிமொழி. இவர்களுடைய மகள் லாவண்யா (வயது17). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கனிமொழி இறந்து விட்டார். இதனால் சரண்யா என்பவரை முருகானந்தம் 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

லாவண்யா தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பள்ளிக்கூட விடுதியில் தங்கி அவர் படித்து வந்தார். இதற்கிடையில், கடந்த மாதம் லாவண்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் மாணவி லாவண்யா கூறுவது போன்ற வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனை தொடர்ந்து, குடும்ப சூழ்நிலையால் பள்ளிக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும், பள்ளி விடுதி காப்பாளர் தன்னை அதிக வேலை வாங்குவதாகவும் இதனால் படிப்பில் கனம் செலுத்த முடியாமல் குறைவான மதிப்பெண் எடுத்ததால் சரியாக படிக்க முடியாது என நினைத்து தான் விஷம் குடித்ததாகவும் மாணவி லாவண்யா கூறும் மற்றொரு வீடியோ வெளியானது. 

மதம் சார்பான பிரசாரங்கள் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் செய்யப்படவில்லை. மாணவி லாவண்யா தற்கொலைக்கு கட்டாய மதமாற்ற துன்புறுத்தல் காரணம் கிடையாது என மாவட்ட கல்வி அலுவலர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், தனது மகளின் மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மாணவியின் தந்தை முருகானந்தம் ஐகோர்ட் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, மாணவி லாவண்யாவின் தற்கொலை வழக்கை கடந்த 31-ம் தேதி சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்நிலையில், மாணவி லாவண்யாவின் தந்தை முருகானந்தம் சுப்ரீம் கோர்ட்டில் இன்று கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த கேவியட் மனுவில் தனது மகள் லாவண்யாவின் தற்கொலை விவகாரம் தொடர்பாக யாரேனும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால் தனது தரப்பையும் கேட்ட பிறகே எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டும் என கூறி மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனிடையே, மாணவி லாவண்யாவின் தற்கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்ட ஐகோர்ட் மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு, தூய இருதய மேல்நிலைப்பள்ளி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story