ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு


ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
x
தினத்தந்தி 8 March 2022 8:29 PM GMT (Updated: 8 March 2022 8:29 PM GMT)

ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ள நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

புதுடெல்லி,

சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சேஷன் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனவும், வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

அந்த மனுவில், நாட்டு மாடுகளுக்கு பெரிய திமில் இருக்கும் என்பதால் அதை ஜல்லிக்கட்டு வீரர்கள் பிடிக்க வசதியாக இருக்கும் எனவும், வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகளுக்கு திமில் இருப்பதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு ஆகஸ்டு 19-ந் தேதி தீர்ப்பு கூறியது. அதில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதியளிக்கும் வகையில் 2017-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சட்டத்திருத்தத்தில், நாட்டு மாடுகளைப் பாதுகாக்கும் வகையிலும், தமிழக கலாசார பண்பாட்டை பாதுகாக்கும் விதத்திலும் இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டியது.

வெளிநாட்டு மாடுகள் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளத் தடையில்லை என்ற அரசு தரப்பு வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும், வெளிநாட்டு மாடுகள், கலப்பின மாடுகளை பங்கேற்க அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகள் நாட்டு மாடுகள் என கால்நடை டாக்டர்கள் சான்றளிக்க வேண்டும் எனவும், பொய் சான்றிதழ் அளித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டது.

நாட்டு மாடுகள் இனப்பெருக்கத்துக்கு ஊக்கம் அளிக்க அரசுக்கு அறிவுறுத்திய ஐகோர்ட்டு, மாடுகளுக்கு செயற்கை கருத்தரித்தல் முறையை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.

இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் வக்கீல் டி.குமணன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

Next Story