நிலக்கரி பற்றாக்குறை; 42 ரெயில்கள் நாடு முழுவதும் காலவரையின்றி ரத்து


நிலக்கரி பற்றாக்குறை; 42 ரெயில்கள் நாடு முழுவதும் காலவரையின்றி ரத்து
x
தினத்தந்தி 29 April 2022 8:55 AM GMT (Updated: 29 April 2022 8:55 AM GMT)

நிலக்கரி கொண்டு செல்லும் சரக்கு ரெயில் செல்வதற்காக 42 ரெயில்கள் நாடு முழுவதும் காலவரையின்றி ரத்து செய்யப்படுகின்றன.




புதுடெல்லி,



நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 70 சதவீதம் நிலக்கரியில் இருந்து பெறப்படுகின்றன.  கோடையை முன்னிட்டு ஏற்பட்டுள்ள வெப்ப அலையால் மின் நுகர்வு அளவு உயர்ந்து உள்ளது.  மின்சார தேவையும் அதிகரித்து உள்ளது.

ஆனால், நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.  இதனால், மின் வினியோக தடை, இருளில் மூழ்குதல் ஆகியவற்றால் கடும் வெப்பத்திற்கு இடையே மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைவதுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொழிற்சாலை உற்பத்தியும் பாதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு 4 நாட்களுக்கு நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு பல மாநிலங்கள் இருளில் மூழ்கின.  இதே நெருக்கடி இந்த ஆண்டும் எதிர்கொள்ளப்படுகிறது.  இந்திய மின் உலைகளில் உள்ள நிலக்கரி இருப்பு, இந்த மாத தொடக்கத்திலேயே ஏறக்குறைய 17% சரிவடைந்த நிலையில், தேவையான அளவை விட 3ல் ஒரு பங்கு மட்டுமே உள்ளது.

நிலக்கரி பற்றாக்குறையால், சில தொழிற்சாலைகள் உற்பத்தியை குறைத்து உள்ளன.  இதனால், ரஷிய போரால் உயர்ந்துள்ள எரிபொருள் விலையை எதிர்கொள்ள அரசு போராடி வரும் சூழலில், பொருளாதார மீட்சிக்கான அச்சுறுத்தலையும் சந்தித்து உள்ளது.

டெல்லியில் குறைந்தது 21 நாட்களாவது நிலக்கரி கையிருப்பு இருக்க வேண்டும்.  ஆனால், ஒரு நாளுக்கும் குறைவான நிலக்கரியே மின் உலைகளில் உள்ளன.  இதனால், மெட்ரோ மற்றும் அரசு மருத்துவமனை சேவைகள் பாதிக்கப்பட கூடும் என மாநில மந்திரி சத்யேந்திர ஜெயின் கூறினார்.  இதேபோன்று நிலக்கரி இருப்பு குறைந்துள்ளது என பல மாநிலங்கள் கூக்குரலிட்டு வருகின்றன.

இதனை முன்னிட்டு அனல் மின் உலைகளுக்கு நிலக்கரியை கொண்டு செல்வதற்காக 42 பயணிகள் ரெயில் நாடு முழுவதும் ரத்து செய்யப்படுகின்றன.  இதனால், நிலக்கரியை கொண்டு செல்லும் சரக்கு ரெயில்கள் விரைவாக சென்று சேரும்.  இதற்காக காலவரையின்றி ரெயில்கள் ரத்து செய்யப்படும்.

நிலக்கரியை கொண்டு செல்வதற்காக போர்க்கால சூழலில் நடவடிக்கைகளை எடுக்க முயற்சித்து வருகிறோம் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

எனினும், ரெயில்கள் ரத்து அறிவிப்பு தற்காலிகம் என்றும் நிலைமை சீரடைந்ததும் மீண்டும் பயணிகள் ரெயில் சேவை இயக்கப்படும் என்றும் இந்திய ரெயில்வே செயல் இயக்குனர் கவுரவ் கிருஷ்ணா பன்சால் தெரிவித்து உள்ளார்.


Next Story